வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் பெற்றோல் வீசி வீடொன்றிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண்ணின் கணவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த குழுவொன்று வாள்வெட்டு தாக்குதலில் ஈடுபட்டதுடன் குறித்த வீட்டை பெற்றோல் ஊற்றி எரியூட்டியிருந்தனர்.
இச்சம்பவத்தின் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு இரண்டு மாத கர்ப்பிணியான 21 வயதான பாத்திமா எனும் இளம் குடும்ப பெண் சம்பவ இடத்திலேயே மரணமடைந்திருந்ததுடன், மேலும் 10 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அதில், மரணமடைந்த பெண்ணின் கணவன் பலத்த தீக் காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உறவினர்களின் வேண்டுதலின் அடிப்படையில் வவுனியா வைத்தியசாலையில் இருந்து திங்கட்கிழமை (24) மாலை யாழ்ப்பணம் தனியார் வைத்தியசாலை ஒன்றிற்கு அவர் மாற்றப்பட்டிருந்தார்.
எனினும் சிகிச்சை பலனின்றி இன்று (26) அதிகாலை அவர் மணமடைந்துள்ளார். அவரது உடலை வவுனியாவிற்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை அவரது உறவினர்கள் மேற்கொண்டுள்ளனர்.
சம்பவ தினத்தன்று மரணித்த இளம் குடும்ப பெண்ணின் கணவரான வவுனியா, உக்குளாங்குளம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ச. சுகந்தன் என்பரே மரணமடைந்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த ஏனையோர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் இடம்பெற்ற வீட்டினை கொழும்பில் இருந்து வருகை தந்த பொலிசார் மற்றும் இராசாயன பகுப்பாய்வாளர்கள் இன்று சோதனை செய்துள்ளனர்.
இச்சம்பவங்கள் தொடர்பில் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைனகளை முன்னெடுத்து வருகின்றனர்.
(வவுனியா விசேட நிருபர், ஓமந்தை விஷேட நிருபர்)