அனைத்துக் கட்சிகளும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் வருவதற்கு வசதியான வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய யாப்பை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அந்தக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் கட்சியின் மாநாட்டை நடத்தி புதிய மாற்றங்களை மேற்கொள்ளுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நவீன உலகத்திற்கு பொருத்தமான வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பினை மாற்றுவதே கட்சியின் எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எவருக்காவது நாடு வீழ்ச்சியுறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானால் அவர்கள் முதலில் ஐக்கிய தேசியக் கட்சியை வீழ்ச்சியுறச் செய்யவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், ஐக்கிய தேசியக் கட்சி வீழ்ச்சியுற்றதால் முழு நாடும் வீழ்ச்சியுற்றது.
எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரே நாட்டுமக்களுக்காக துணிச்சலுடன் முன்வந்து மீண்டும் நாட்டை கட்டியெழுப்பினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும்போதே கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்