உலகின் செல்வாக்கு மிக்க மதங்களில் ஒன்றான பௌத்தம், பண்டைய இந்தியாவில் அதன் வேர்களை ஆழமாக பதித்துள்ளது. அது அமைதி, இரக்கம் மற்றும் அறிவொளியின் கலங்கரை விளக்கமாக உள்ளது. புத்த பெருமான் என்று அறியப்பட்ட சித்தார்த்த கௌதமர், சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் இன்றைய பீகாரில் உள்ள போதி மரத்தடியில் ஞானம் பெற்றார்.
பௌத்தம் உலகின் முதன்மையான தத்துவங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அது மனிதகுலத்திற்கு இரட்சிப்புக்கான பாதையை பரிந்துரைத்தது. இப்போது குஷிநகர் என்று அழைக்கப்படும் குசினாராவில் புத்த பெருமான் மறைந்ததன் பிறகுதான், பௌத்த தத்துவம் வேகம் பெற்று உலகம் முழுவதும் பரவியது.
இன்று பௌத்த மதம் அதன் பிறப்பிடத்திற்கு அப்பால் பல திசைகளுக்கும் எல்லைத்தாண்டி சென்றுள்ளது. மனிதகுலத்திற்கு கிடைத்த இந்த விலைமதிப்பற்ற தத்துவத்தை இந்தியா தொடர்ந்து போற்றிப் பாதுகாத்து வருகிறது. பௌத்தர்களுக்கான புனித யாத்திரை வசதிகளை எளிதாக்குவதற்கு இந்திய அரசாங்கத்தின் சமீபத்திய முயற்சிகள் பௌத்த மதத்திற்கும் அதன் தாயகத்திற்கும் இடையிலான பிணைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளன.
பௌத்தம்: காலத்தை வென்ற கருணையின் தத்துவம்
இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளும் உலகெங்கிலும் உள்ள பக்தர்களையும், யாத்ரீகர்களையும் ஈர்க்கும் புனித பௌத்த தலங்களை கொண்டுள்ளன.
இலங்கையின் மிகவும் குறிப்பிடத்தக்க புனித யாத்திரை ஸ்தலம் கண்டியில் உள்ள தலதா மாளிகையாகும். இது புத்தரின் புனிதப் பல்லை நினைவுச்சின்னமாக கொண்டுள்ளது.
இதேபோல், புத்த மதத்தின் பிறப்பிடமான இந்தியாவில், புத்தர் ஞானம் பெற்ற புத்தகயா மற்றும் அவர் தனது முதல் பிரசங்கத்தை நிகழ்த்திய சாரநாத் போன்ற பல தலங்கள் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. இந்தத் தலங்கள் இலங்கை மற்றும் இந்தியாவின் பௌத்த பாரம்பரியத்தை இணைக்கும் கலாசார மற்றும் பண்பாட்டின் பாலங்களாக அமைந்துள்ளன. பௌத்தம் துன்பத்தின் தன்மை, அதற்கான காரணம் மற்றும் விடுதலைக்கான பாதையை வலியுறுத்துகிறது. அதன் போதனைகளான இரக்கம், ஞானம் மற்றும் அகிம்சை ஆகியவை உலகத்தை ஆழமாக ஈர்த்துள்ளன. அமைதி மற்றும் அன்பைத் தேடும் வழியில் மில்லியன் கணக்கான உள்ளங்களைத் தொட்டிருக்கின்றன.
பல நூற்றாண்டுகளாக, பௌத்தம் தென்கிழக்கு ஆசியா, கிழக்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியா உட்பட பல்வேறு பகுதிகளில் பரவி, அவர்களின் கலாச்சாரங்கள் மற்றும் சமூகங்களின் ஒன்றிணைந்த அம்சமாக மாறியது.
பௌத்தத்தின் பிறப்பிடமாக இந்தியாவின் பங்கு
பௌத்தத்தின் பிறப்பிடமான இந்தியா அதன் வரலாற்றில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. மேலும் அது அதன் கலாச்சார பாரம்பரியத்தின் இன்றியமையாத பகுதியாக பௌத்த மதத்தை தொடர்ந்து போற்றி வருகிறது. புத்தரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய நாட்டின் வரலாற்று தளங்கள் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலுமிருந்து மில்லியன் கணக்கான யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.
புத்தர் தனது முதல் பிரசங்கத்தை நிகழ்த்திய புராதன நகரமான இந்தியாவின் வாரணாசி மற்றும் அவர் ஞானம் பெற்ற புத்தகயா ஆகியவை பௌத்தர்களின் குறிப்பிடத்தக்க புனிதத் தலங்களாகும்.
புனித யாத்திரை வருகைகளை எளிதாக்குவதற்கான சமீபத்திய முயற்சிகள்
பௌத்தத்தின் முக்கியத்துவத்தை ஓர் ஆன்மீகப் பாதையாக உணர்ந்து, உலகெங்கிலும் உள்ள பௌத்த யாத்ரீகர்கள் இந்தியாவின் புனிதத் தலங்களுக்குச் செல்லும் பயணத்தில் அவர்களுக்கு ஆதரவளித்து அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க இந்திய அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இந்தியாவின் சமீபத்திய முயற்சிகளில் சில:
உள்கட்டமைப்பு மேம்பாடு: யாத்திரிகர்களுக்கு மிகவும் வசதியான அனுபவத்தை உறுதி செய்வதற்காக, முக்கிய யாத்திரை தலங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் இந்தியா முதலீடு செய்துள்ளது. இதில் சிறந்த சாலைகள், தங்குமிட வசதிகள் மற்றும் ஏனைய வசதிகள் ஆகியவை அடங்குகின்றன.
ஒன்லைன் விசா வசதிகள்: விசா செயல்முறையை நெறிப்படுத்த, இந்திய அரசு ஒன்லைன் விசா வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சர்வதேச பௌத்த யாத்ரீகர்கள் புனித தலங்களை தரிசிக்க தேவையான அனுமதிகளைப் பெறுவதை எளிதாக்குகிறது.
சிறப்பு யாத்திரை ரயில்கள்: அதிகரித்து வரும் யாத்ரீகர்களின் எண்ணிக்கையைப் பூர்த்தி செய்வதற்காக, முக்கியமான புத்த தலங்களை உள்ளடக்கிய சிறப்பு யாத்திரை ரயில்களை இந்தியா தொடங்கியுள்ளது. இந்த ரயில்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு வசதியான மற்றும் மலிவான பயண முறையை வழங்குகின்றன.
பாரம்பரியத்தை பாதுகாத்தல்: பௌத்த பாரம்பரிய தளங்களை பாதுகாப்பதிலும் இந்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இது தொல்பொருள் அதிகாரிகளுடன் இணைந்து பழங்கால ஸ்தூபிகள், மடங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களை பாதுகாத்து, எதிர்கால சந்ததியினருக்கு வழங்குவதை உறுதி செய்கிறது.
பௌத்தத்தின் உலகளாவிய தாக்கம்
இந்தியாவில் தோன்றியதைத் தாண்டி, பௌத்தம் உலக அரங்கில் அழியாத முத்திரையை பதித்துள்ளது. அதன் தாயகத்தில் இருந்து தொலைதூர நாடுகளுக்கு அதன் பயணம் பல்வேறு மரபுகள் மற்றும் சிந்தனைப் பள்ளிகளின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. இலங்கை, தாய்லாந்து, மியான்மர், கம்போடியா, ஜப்பான், சீனா மற்றும் திபெத் போன்ற நாடுகள் புத்த மதத்தை தங்கள் கலாச்சார அடையாளத்தின் அடிப்படையாக ஏற்றுக்கொண்டன. புத்தரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட கலை, இலக்கியம் மற்றும் கட்டிடக்கலை ஆகியவை பௌதத்தின் வளமாக அந்தந்த நாடுகளில் வளர்ச்சி பெற்றன.
பௌத்த பாரம்பரியத்தை வளர்ப்பதில் இந்தியாவின் அர்ப்பணிப்பு
பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் இந்தியா அர்ப்பணிப்புடன் செயலாற்றுகிறது. இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (Archaeological Survey of India- ASI) பண்டைய புத்த நினைவுச் சின்னங்கள் மற்றும் பௌத்த தளங்களின் மறுசீரமைப்பு மற்றும் பராமரிப்பில் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் உன்னதமான முயற்சிகள் ஊடாக புதையுண்ட பொக்கிஷங்களை வெளிக்கொணரும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
மேலும், இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் பௌத்த ஆய்வுகளை ஆழமாக ஆராய்ந்து, பழங்கால நூல்கள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் போதனைகளைக் கண்டறிந்துள்ளன. இவற்றை வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பதில் அறிஞர்கள் அயராது உழைத்து வருகின்றனர்.
கலாச்சார பரிமாற்றங்கள் மற்றும் புனித யாத்திரைகளை மேம்படுத்துதல்
பௌத்த யாத்திரைத் தலங்களைச் சுற்றியுள்ள உள்கட்டமைப்பை மேம்படுத்துவதோடு, உலகெங்கிலும் உள்ள பௌத்த சமூகங்களுக்கிடையில் கலாச்சார பரிமாற்றங்களை வளர்ப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த பரிமாற்றங்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள், துறவிகள் மற்றும் பயிற்சியாளர்கள் ஒன்றுகூடி அறிவு மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் கலாச்சார உரையாடலுக்கான தளங்களாக உருவாகியிருக்கின்றன. இத்தகைய முயற்சிகள் உலகளாவிய பௌத்தர்களிடையே சகோதரத்துவம் மற்றும் புரிந்துணர்வின் பிணைப்பை வலுப்படுத்துகின்றன.
இந்திய அரசாங்கம், பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகளுடன் சேர்ந்து, சர்வதேச பௌத்த மாநாடுகள், கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து, ஆன்மீகத் தேடல்களுக்கான வாய்ப்புகளை வழங்குகிறது.
இந்தியாவில் உள்ள புனிதத் தலங்களை தரிசிக்கும் பௌத்த சுற்றுலா ஒரு குறிப்பிடத்தக்க பொருளாதார உந்துதலாக உருவெடுத்துள்ளது. யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை உள்ளூர் பொருளாதாரங்களின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளது. விருந்தோம்பல், போக்குவரத்து தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏராளமான நபர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது. இந்த வளர்ந்து வரும் சுற்றுலாத் துறையானது வரலாற்றுத் தலங்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், சுற்றியுள்ள சமூகங்களில் சமூக-பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.
பௌத்தம் இந்தியாவிடமிருந்து உலகிற்கு கிடைத்த காலத்தால் அழியாத தத்துவமாக நிலைத்து நிற்கிறது. இந்தியா பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் கொண்டுள்ள உறுதிப்பாடு, பௌத்த மதத்தின் உலகளாவிய முக்கியத்துவத்தையும் எதிர்கால சந்ததியினருக்காக இந்த விலைமதிப்பற்ற பாரம்பரியத்தையும் பாதுகாப்பதற்கான பொறுப்பையும் நிரூபிக்கிறது.
புனித யாத்திரிகர்களின் வருகைகளை எளிதாக்குதல் மற்றும் கலாச்சார பரிமாற்றங்களை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் சமீபத்திய முயற்சிகள் மூலம், இந்தியா உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களிடையே ஒற்றுமை உணர்வையும், புரிதலையும், அமைதி மற்றும் பரஸ்பர மரியாதையையும் மேம்படுத்துகிறது.
இந்தியாவிடமிருந்து இலங்கைக்குக் கிடைத்த மிகப் பெரிய கருணையின் தத்துவமே பௌத்தம் ஆகும். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவும் இலங்கையும் முன்னெப்போதையும் விட உத்திசார் பங்காளிகளாக நெருங்குவதற்கும் பௌத்தம் ஒரு பாலமாக அமைந்திருக்கிறது.
பௌத்தம் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஒருங்கிணைக்கும் சக்தியாக இருந்து வருகிறது. பௌத்தம் இரு நாடுகளுக்கும் இடையில் மத மற்றும் கலாச்சார புரிதலின் வலுவான பிணைப்பை உருவாக்குகிறது. பௌதத்தின் மூலம் பகிரப்பட்ட இந்த புரிதல் இரண்டு நாடுகளுக்கிடையில் நெருங்கிய அரசியல் உறவுகளை வளர்த்துள்ளது. இந்த உறவு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இரு நாடுகளும் மூலோபாய பங்காளிகளாக ஒத்துழைக்க ஒரு சிறந்த தளத்தை உருவாக்கியுள்ளது.
ஆதவன்