சுவீடனில் குர்ஆனை எரிக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு திட்டமிட்ட நிலையில் ஈராக் தலைநகர் பக்தாதில் உள்ள சுவீடன் தூதரகத்தை நேற்று (20) முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அதற்கு தீ வைத்துள்ளனர்.
ஸ்டொக்ஹோமில் உள்ள ஈராக் தூதரகத்திற்கு வெளியில் ஒன்றுகூட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஸ்வீடன் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதன்போது புனித குர்ஆன் பிரதி மற்றும் ஈராக்கிய தேசிய கொடிக்கு தீ வைக்கவும் ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இதற்கு எதிராகவே செல்வாக்கு மிக்க மதத் தலைவரான மொக்ததா சதிரின் ஆதரவாளர்கள் நேற்று காலை பக்தாதில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதன்போது சுவீடன் தூதரக மதில் சுவரில் ஏறிக் குதித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு தீவைத்து சேதம் ஏற்படுத்தியுள்ளனர்.
அனைத்து தூதரக பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக சுவீடன் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. தூதரகம் மீதான தாக்குதலுக்கு ஈராக் வெளியுறவு அமைச்சு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் ஸ்டொக்ஹோமில் உள்ள பள்ளிவாசலுக்கு வெளியில் குர்ஆன் பிரதியை எரித்து கடும் எதிர்ப்பை ஏற்படுத்திய சல்வான் மொமிகா என்பவரே மீண்டும் குர்ஆனை எரிப்பதற்கு திட்டமிட்டிருந்ததாக சுவீடன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர் சுவீடனில் வாழும் ஈராக்கைச் சேர்ந்த அகதியாவார்.