மூன்று நாட்களுக்கு முன்னர் சந்தேகத்திற்கிடமான முறையில் காணாமல் போன 24 வயதுடைய இளம் தாய் மற்றும் அவரது 11 மாத குழந்தை ஆகிய இருவரின் சடலங்கள் அங்குருவத்தோட்ட, ரத்மல்கொட காட்டில் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முதல் அங்குருவத்தோட்ட, ஊருதுடாவ பிரதேசத்தில் காணாமல் போன தாய் மற்றும் அவரது கைக்குழந்தையின் சடலங்களே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீட்டில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் உள்ள காட்டுப் பகுதியில் அப்பகுதி மக்கள் மற்றும் பொலிசார் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் இன்று (21) சடலங்களை மீட்டுள்ளனர்.
இரண்டு உடல்களையும் விலங்குகள் கடுமையாக சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது மனைவி கைக்குழந்தையுடன் காணாமல் போனதாக கடந்த செவ்வாய்க்கிழமை (18) அங்குருவத்தோட்ட பொலிஸில் கணவர் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து மேற்கொண்ட பொலிஸ் விசாரணையில், குறித்த பெண்ணின் வீட்டில் சிறிய அளவிலான இரத்தக்கறைகள் ஆங்காங்கே காணப்பட்டமை அவதானிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து பொலிஸ் மோப்ப நாய் உதவியுடன் தேடுதலை மேற்கொண்ட போதிலும் பலனளிக்காத நிலையில், இன்றையதினம் (21) குறித்த இருவரினதும் சடலங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில், முன்னாள் இராணுவ சிப்பாயான, மரணமடைந்த பெண்ணின் கணவரின் தங்கையின் கணவரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட குறித்த முன்னாள் இராணுவ சிப்பாயிடம் மேற்கொண்ட விசாரணையில் முக்கிய தகவல்கள் எதுவும் கிடைக்காததால் அவரை விடுவித்ததாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்திருந்தார்.
ஆயினும் சந்தேநபர் குறித்த பகுதியிலிருந்து மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குருவத்தோட்ட பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.