இலங்கையின் 15ஆவது சனத்தொகை மற்றும் வீட்டு வசதிகள் கணக்கெடுப்பின் இரண்டாம் கட்ட கள நடவடிக்கைகள் தற்பொழுது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கட்டத்தில் நாட்டிலுள்ள அனைத்து கட்டடங்களும் இலக்கமிடப்பட்டு அதன் விபரங்கள் சேகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கிழக்கு மாகாண மற்றும் மாவட்ட மட்ட உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் செயலமர்வு கடந்த புதன்கிழமை (05) மட்டக்களப்பு மன்முணை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட மன்முணை வடக்கு பிரதேச செயலக செயலாளர் வாசுதேவன் உரையாற்றுகையில்,
“ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு புள்ளிவிபரத் தகவல்கள் இன்றியமையாத ஒன்றாகும். ஜப்பான் போன்ற நாடுகளில் செயற்படுத்தப்படுவது போல் எமது நாட்டிலும் செயற்படுத்தப்பட்டால் இலகுவாக இருக்கும். ஆனால் எமது நாட்டை பொறுத்தமட்டில் இவ் அடைவு மட்டத்திற்கு நாம் செல்வதற்கு இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது” என்றார்.
இந்நிகழ்வில் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப பிரதிப் பணிப்பாளர் தினேஸ், உதவிப் பணிப்பாளர் பசில், திருகோணமலை மாவட்ட புள்ளிவிபரவியலாளர் இஷட். ஷரிப்டீன் உட்பட மூன்று மாவட்டங்களினதும் புள்ளி விபரத்திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
– ஏறாவூர் சுழற்சி நிருபர்