தமிழ், சிங்களப் புத்தாண்டையிட்டு 779 கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அமைய, குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 34(1) பிரிவிற்கமைவாக ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளிள் உள்ள கைதிகள் இன்று இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள், செலுத்த வேண்டிய அபராதங்களை செலுத்த முடியாது சிறையில் உள்ளவர்கள், சிறு குற்றங்களுக்காக கைதாகி தண்டனையின் பாதியை நிறைவு செய்த கைதிகளுமே இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், வவுனியா சிறைச்சாலையில் இன்றையதினம் (13) 10 கைதிகள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு இன்று சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள விதிகள் மற்றும் முறையான சுகாதார நடைமுறைகளின் கீழ், உறவினர்கள் வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவு, இனிப்புகள், சுகாதாரத் தேவைப் பொருட்களை கைதிகளுக்கு வழங்க முடியும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.