நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க
அஸ்வெசும கொடுப்பனவை பெற்றுக்கொள்வதற்கு மேலும் மூன்று இலட்சம் குடும்பங்கள் புதிதாக தகைமை பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
07 இலட்சம் அஸ்வெசுவ மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலித்ததையடுத்து மேலும் 03 இலட்சம் குடும்பங்கள் அதற்கு தகுதி பெற்றுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் தகைமை பெறாத குடும்பங்களின் எண்ணிக்கை ஐந்தாயிரமாகும் என்றும் நிதி பொருளாதார மேம்பாடு மற்றும் தேசிய கொள்கைக்கான அமைச்சு தெரிவித்துள்ளது. அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர், அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு வேலைத்திட்டம் தொடர்பில் முன்வைக்கப்பட்டிருந்த 6,40,000 மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டதன் பின்னர், 3,00,000 குடும்பங்கள் புதிதாக அதில் இணைத்துக்கொள்வதற்கு தகைமை பெற்றுள்ளன.
அந்த வகையில், அஸ்வெசும கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும் குடும்பங்கள் 17,00,000 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்த தவணைப் பணத்தை வழங்குவதற்கு முன்னதாக புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான தவணையை வங்கிகளில் வைப்பிலிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனை காரணமாக இதுவரை அஸ்வெசும கொடுப்பனவைப் பெற்றுவந்த 5,209 குடும்பங்கள் அதற்குத் தகைமையற்றவர்களாக காணப்படுவதாகவும் மேலும் 2,567 குடும்பங்கள் தாம் பெற்றுக்கொண்டுள்ள தொகையின் கீழ் மட்டத்திற்குச் சென்றுள்ளன. அத்துடன் அவ்வாறு கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொண்டு வரும் 50,882 குடும்பங்களுக்கான கொடுப்பனவு மட்டம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
11,00,000 மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகள் கிடைத்துள்ள நிலையில் மிக விரைவில் அதனைப் பரிசீலிக்கும் நடவடிக்கைகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் நேற்று இடம்பெற்ற விசேட பேச்சுவார்த்தையொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்