யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனங்கிளப்பு பிரதேசத்திலுள்ள கிணறொன்றிலிருந்து இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
33 வயதுடைய குடும்பப் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டார்.
திருமணமாகி நுணாவில் பிரதேசத்தில் வசித்து வரும் மேற்படி பெண், சம்பவ தினத்தன்று தனது குழந்தையுடன் தனங்கிளப்பிலுள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று குழந்தையை ஒப்படைத்து விட்டு, சைக்கிளில் சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் இவரைக் காணாத நிலையில் உறவினர்கள் தேடியுள்ளனர். இதன்போது தனங்கிளப்பிலுள்ள கிணறொன்றுக்கு அருகில் இவர் பயணித்த சைக்கிள் காணப்பட்டதுடன், இவரும் கிணற்றில் சடலமாக காணப்பட்டதை உறவினர்கள் அவதானித்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(சாவகச்சேரி விசேட நிருபர்)