புது வாழ்வு பொங்கும் என்ற நம்பிக்கையுடன் தைத்திருநாளை வரவேற்பதாக அமைச்சர் டக்களஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் வாழ்த்தில் அமைச்சர் தெரிவித்துள்ளதாவது:
தைப்பொங்கல் திருநாள் எமது மக்களின் பண்பாட்டு பெருநாள், உழவர் திருநாள் என்றும், தமிழர் பெருநாள் என்றும் எமது மக்கள் தொன்று தொட்டு கொண்டாடும் தொன்மைத்திருநாள் இது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் மாற்றம் ஒன்றை எதிர் பார்க்கும் எமது மக்கள், சூரியனுக்கு நன்றி செலுத்தி பொங்கி படைத்து வருகின்றனர். எமது மக்களின் இடர் சூழ்ந்த பொழுதுகளில் எம்முடன் கூடவே இருந்து துயர் தீர்த்தவர்களுக்கும், அழிவுகளற்ற யதார்த்த வழிமுறையில் தம்மை வழி நடத்தி செல்வோருக்கும் நன்றி செலுத்தும் பண்பாட்டையும் எமது மக்கள் வளர்த்தெடுக்க வேண்டும்.குறையின்றி உயிர்கள் வாழவும், மேன்மை மிகு நீதி விளங்கவும் பிறந்துள்ள தைத்திருநாளில் வழி பிறக்கட்டும்.
இலட்சியத்தில் தோற்றால், சூட்சுமத்தை மாற்றுங்கள்,இலட்சியத்தை அல்ல என்ற உபதேசங்களை ஏற்று, தோற்றுப்போன வழிமுறைகளை கைவிட்டு, சகலருக்குமான பொற்காலத்தை விரைவாக வென்றெடுப்போம்.
நாம் நீட்டியிருக்கும் தேசிய நல்லிணக்க கரங்களின் அழைப்பையேற்று, எமது மக்களை நோக்கியும் பதில் கரம் நீட்டும் சாதகமான நிலைமைகள் கனிந்து வந்திருக்கின்றன.
சூழ்நிலைகளை சாதகமாக பயன் படுத்தி மாற்றங்களை உருவாக்குவோம். அறம் வெல்லும். அநீதி தோற்கும். இதுபோல, எமது மக்களின் நம்பிக்கைகளும் வெல்லட்டும்.