புதுக்குடியிருப்பில் டெங்கு நோய் பரவலை தடுக்க விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர், புதுக்குடியிருப்பு பிரதேச சபையினருடன் இணைந்து இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
பிரதேசசபை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள், சுகாதார பரிசோதகர்கள், இராணுவம், பொலிஸார், வர்த்தக சங்கத்தினர் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை நேற்றுமுன்தினம் முதல் ஆரம்பித்துள்ளனர். புதுக்குடியிருப்பு நகர்பகுதி மற்றும் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்துக்குட்பட்ட பகுதிகளில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் டெங்கு நோய் சடுதியாக அதிகரித்திருப்பதனால் நீர் தேங்கி நுளம்பு குடம்பிகள் பரவக்கூடிய சிறிய பாத்திரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், ஏனைய நீர் தேங்கி நிற்கக் கூடிய பொருட்களை அகற்றுமாறும், டெங்கு அபாய நிலையை கருத்திற்கொண்டு சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தல்கள் மீறப்படும் பட்சத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
(மாங்குளம் குரூப் நிருபர்)