அயர்லாந்து தலைநகர் டப்ளினில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலை அடுத்து வன்முறை வெடித்துள்ளது.
இந்தக் கத்திக்குத்து தாக்குதலில் 3 சிறுவர்கள் உட்பட ஐவர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியவர் வெளிநாட்டவர் என்ற வதந்தி பரவியதால் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் குதித்தனர்.
அவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சில வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. வலசாரி சித்தாந்தத்தைப் பின்பற்றும் குழுவினரே வன்முறைக்குக் காரணம் என்று அயர்லாந்துக் பொலிஸ் தலைவர் சாடினார்.
கத்திக்குத்துச் சம்பவத்தைக் குற்றவாளிகள் பேரழிவுக்குப் பயன்படுத்திக்கொள்வதாக அயர்லாந்து நீதியமைச்சர் குற்றஞ்சாட்டினார்.
கத்தி வைத்திருந்த 50 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒரு பாலர் பாடசாலைக்கு வெளியே சிலரைத் தாக்கினார். அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தாக்குதல் குறித்த புலனாய்வு தொடர்கிறது.
மறுபுறம் போராட்டம் நாடு முழுவதும் விரிவடைந்து விடக்கூடாது என பொலிஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பாராளுமன்றத்தை சுற்றி பொலிஸ் குவிக்கப்பட்டுள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்த 400க்கும் அதிகமான பொலிஸார் டப்ளின் நகரம் முழுவதும் குவிக்கப்பட்டு நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.