மெடா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பர்குடன் கூண்டுச் சண்டை இத்தாலியில் நடைபெறும் என்று எக்ஸ் சமூக ஊடகத்தின் நிறுவனர் இலோன் மஸ்க் கூறியுள்ளார்.
இருவரும் கூண்டுச் சண்டையில் ஈடுபடுவதைப் பற்றிப் பல நாட்களாகத் தகவல்கள் வருகின்றன. எனினும் அதிகாரபூர்வத் தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.
இத்தாலியின் பிரதமர், கலாசார அமைச்சர் ஆகியோருடன் பேசியிருப்பதாகக் கூறிய மஸ்க், சண்டை போடுவதற்குச் சிறந்த இடத்திற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்திருப்பதாக கூறினார்.
‘பெரிய அறநிறுவன நிகழ்ச்சி’யை ஏற்பாடு செய்வதற்குப் பேச்சுவார்த்தை தொடர்வதை இத்தாலியின் அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர்.
மஸ்க் சவால் விடுத்ததிலிருந்து அவருடன் சண்டையிடுவதற்குத் தயாராய் இருப்பதாக தற்காப்புக் கலையில் ஆர்வமுள்ள ஸக்கர்பர்க் த்ரீட்ஸில் கூறினார்.
‘மஸ்க் உண்மையில் திகதியை உறுதிசெய்தால் நான் அதைப் பற்றி அறிவிப்பேன். அதுவரை அவர் என்ன சொன்னாலும் நான் இன்னும் இணக்கம் கூறவில்லை என்று எண்ணுங்கள்,’ என்று ஸக்கர்பர்க் குறிப்பிட்டார்.
மெடா நிறுவனம் ட்விட்டர் தளத்தைப் போன்ற த்ரீட்ஸ் செயலியை அறிமுகம் செய்ததிலிருந்து ஸக்கர்பர்கிற்கும் மஸ்கிற்கும் இடையில் வணிகப் போட்டி சூடு பிடித்துள்ளது.
52 வயதான மஸ்க் மற்றும் 39 வயதான ஸக்கர்பர்க் இருவரும் உலகின் முன்னணி செல்வந்தர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.