ட்விட்டர் என முன்னர் அழைக்கப்பட்ட சமூக ஊடகமான எக்ஸ் தளத்தை பயன்படுத்தும் அனைவருக்கும் கட்டணம் விதிப்பது பற்றிப் பரிசீலிப்பதாக அதன் உரிமையாளர் இலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் நடத்திய சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
பொட்ஸ் எனப்படும் தொந்தரவு தரும் தானியக்கச் செயல்முறையையும் பொய்க் கணக்குகளையும் எதிர்த்துப் போராட, எக்ஸ் ஐக் கட்டணச் சேவையாக மாற்றுவது ஒன்றே வழி என மஸ்க் கூறினார்.
எக்ஸ் சேவையைப் பயன்படுத்துவோர் மிகச் சிறிய கட்டணத்தைச் செலுத்தக்கூடும் என்றார் அவர்.
இது திடீரென எடுக்கப்பட்ட முடிவா அல்லது உறுதியான திட்டங்கள் இருப்பதன் முன்னோட்டமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என கூறப்பட்டுள்ளது.
எக்ஸ் ஊடகத்தை வாங்கியது முதலே அதன் சேவைகள் சிலவற்றுக்குக் கட்டணம் விதிப்பது பற்றி மஸ்க் பேசிவந்துள்ளார். கட்டணம் செலுத்தும் பயனீட்டாளர்கள் நீண்ட பதிவுகளை இட அனுமதித்தல், அவர்களது பதிவுகளை அதிகமானோர் பார்வையிட வசதி செய்துதருதல் போன்றவை அத்தகைய சேவைகளில் சிலவாகும்.