விநாயகர் சதுர்த்தி நாளில் வீடுகளில் பல வண்ணங்களில், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வாங்கி வந்து பிரதிஷ்டை செய்து, விநாயகருக்கு விருப்பமான அருகம்புல், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, கடலை, பழங்கள் படைத்து வழிபடுவார்கள்.
விநாயகர் பூஜை முடிந்ததும் 3,5,7 அல்லது 10 வது நாளில் வீடுகளில் வைத்து வழிபடப்பட்ட விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து பூஜை செய்து, ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.முழு முதற்கடவுளான விநாயகப் பெருமானின் அவதார தினத்தை நாம் விநாயகர் சதுர்த்தியாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம்.
விநாயகப் பெருமான் அறிவு, ஞானம், செல்வ வளம், அதிர்ஷ்டம் ஆகியவற்றை தரும் கடவுளாக வணங்கப்படுகிறார்.
ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் விநாயகப் பெருமான் அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றன. இதனால் சதுர்த்தி திதி விநாயகப் பெருமானுக்குரிய திதியாக ஆனது.பொதுவாக விநாயகப் பெருமானை வழிபடுபவர்களுக்கு துன்பங்கள், தடைகள் அனைத்தும் விலக நன்மைகள் பெருகும் என்பது ஐதீகம்.
நவகிரக தோஷம், சர்ப்ப தோஷம், குறிப்பாக சனி பகவானால் ஏற்படும் தொல்லைகள், திருமணத் தடை, காரியத் தடை, வறுமை, கடன் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளும் விநாயகரை வழிபட விலகி விடும். அதிலும் அவருக்குரிய சதுர்த்தி திதியில் விரதம் இருந்து வழிபட்டால் சகல விதமான நன்மைகளும் கிடைக்கும்.
அனைத்து மாதங்களிலும் வரும் சதுர்த்தி திதி சிறப்பானது என்றாலும் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். சதுர்த்தி விரதம் இருக்க துவங்குபவர்கள் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியில் துவங்குவது சிறப்பானதாகும்.