Wednesday, September 27, 2023
Home » இரண்டு நாட்களில் 2862 கிலோ பீடி இலைகள் மீட்பு

இரண்டு நாட்களில் 2862 கிலோ பீடி இலைகள் மீட்பு

by Prashahini
September 18, 2023 11:27 am 0 comment

புத்தளம் – கற்பிட்டி பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 2862 கிலோ கிராம் பீடி இலைகளை கைப்பற்றியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், டிங்கி இயந்திர படகு மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டனர். புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி – வன்னிமுந்தல் களப்பு பிரதேசம் மற்றும் இலந்தையடி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே மேற்படி பீடி இலைகள் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி, இலந்தடிய கடற்கரைப் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான தம்பபண்ணி கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 2223 கிலோ கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன.

குறித்த பீடி இலைகள் 70 பொதிகளில் அடைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன், இதற்குப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை, கற்பிட்டி வன்னிமுந்தல் கடற் பிரதேசத்தில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது, 19 உரைப் பைகளில் அடைக்கப்பட்ட நிலையில் 639 கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், இதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் டிங்கி இயந்திர படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பெயரில் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் 25 மற்றும் 45 வயதுடையவர்கள் என்றும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் டிங்கி இயந்திர படகு என்பவற்றுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் கூறினர்.

கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த, கடற்படையினர் தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதி மற்றும் கடற்கரையை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2023 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT