அடிப்படை உரிமை மனு விசாரணை ஜூலை 14இல்

பரீட்சை நடைபெறும் காலங்களில் மின்துண்டிப்பை தவிர்க்குமாறு மின்சார சபை உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, இலங்கை ஆசிரியர் சங்கம் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஜூலை 14ம் திகதி நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மேற்படி மனு மீதான விசாரணை நேற்றைய தினம் நீதிபதிகளான பிரியந்த ஜயவர்தன, அச்செல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இடம்பெற்றது. அதன்போதே மேற்படி மனுமீதான விசாரணையை எதிர்வரும் 14ம்திகதி

முன்னெடுப்பதற்கு தீர்மனிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மேற்படி மனுவில் பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பரீட்சைகள் ஆணையாளருக்கு மீண்டும் அழைப்பாணையை விடுக்குமாறும் நீதிமன்றத்தில் மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேற்படி மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் பிரதிவாதிகளாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சின் செயலாளர், மின்சார சபையின் தலைவர், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர், இலங்கை மனித உரிமை ஆணைக்குழு உறுப்பினர் உள்ளிட்டவர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

 

(லோரன்ஸ் செல்வநாயகம்)


Add new comment

Or log in with...