பொகவந்தலாவை கெசல்கமுவ ஓயாவில் ஆணின் சடலம் மீட்பு

- "வியாதி தாங்க முடியவில்லை..." என எழுதிய பிரதியும் மீட்பு

காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீரேந்திச் செல்லும் பொகவந்தலாவை, பொகவான, கெசல்கமுவ ஓயாவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சடலமாக மீட்கப்பட்ட நபர் நேற்று (29) தீடீரென காணாமல் போயுள்ளார். குறித்த நபரை தேடும் நடவடிக்கையினை உறவினர் முன்னெடுக்கப்பட்டப்போதும் குறித்தப் பிரதேசத்தில் உள்ள ஒரு நபரினால் குறித்த நபர் சடலமாக கெசல்கமுவ ஓயாவில் மிதந்துக்கொண்டு இருந்ததை இனங்கண்டு பொகவந்தலாவை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்தில் உயிரிழந்த நபரின் பாதணிகள், குடை, மாதாந்த வைத்திய பரிசோதனை, புத்தகம் என்பன மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட குறித்தப் புத்தகத்தில் தனக்கு வியாதி தாங்க முடியவில்லை என்றும் தனது முடிவுக்கு தானே பொறுப்பு என்றும் தனது மகன் மிகவும் நல்லவர் என்றும் தன்னை அன்பாக பார்த்துக்கொள்வார் எனவும் யாரையும் தண்டிக்க வேண்டாம் என்றும் இறந்தவரின்  கையெழுத்தில் இறப்பதற்குமுன்பே எழுதி வைக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட நபர் பொகவந்தலாவை பொகவானை தோட்டப்பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 75வயது கொண்ட பெரியண்ணன் கருப்பையா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(ஹற்றன் சுழற்சி நிருபர்)

தற்கொலையை தடுப்போம்!
நீங்கள் தனிமையில் இருப்பதாக உணருகின்றீர்களா அழையுங்கள்

  • தேசிய மனநல உதவி இலக்கம் 1926
  • இலங்கை சுமித்ரயோ 011 2696666
  • CCC line 1333

Add new comment

Or log in with...