- விண்ணப்பித்த 334,805 பேரில் 329,668 பேர் தோற்றம்
- விசேட தேவையுடைய 250 பேர் உள்ளிட்ட 20,000 பேருக்கு புலமைப்பரிசில்
- பெப்ரவரி 28 வரை மீள் பரிசீலனைக்கு விண்ணப்பிக்கலாம்
பாடசாலைகளுக்கு மாணவர்களைத் தேர்ந்தெருப்பதற்கும் உதவிப்பணம் வழங்குவதற்குமாக தரம் 5 மாணவர்களுக்காக நடாத்தப்பரும் 2022 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடப்பட்டுள்ளது.
2022 டிசம்பர் மாதம் 18ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 2,894 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற மேற்படி பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (25) வெளியிடப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சீ. அமீத் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.
தற்போ நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு விண்ணப்பித்த 334,805 மாணவர்களுள் 329,668 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், www.doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களின் ஊடாக பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடியுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சார்த்திகள் உரிய சுட்டெண்ணை சரியாக வழங்குவதன் மூலம் பெறுபேறுகள் மற்றும் வெட்டுப்புள்ளிகளை பார்வையிட முடியும் என்பதுடன் உரிய பரீட்சைப் பெறுபேற்றை தரவிறக்கம் செய்து அச்சுப் பிரதியைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
அதற்கமைய, உதவிப்பணம் பெற்றுக்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை 20,000 என்பதுடன் அதில் 250 விசேட தேவையுடைய மாணவர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பெறுபேறுகளை தீர்மானிக்கும் போது மாவட்ட நிலைகள் (District Rank) அல்லது நாடளாவிய நிலைகள் (Island Rank) தரப்படுத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெறுபேறுகளை வெளியிடும் போது பரீட்சார்த்திகள் பெற்றுக் கொண்ட மொத்தப் புள்ளிகள் மாவட்டம், மொழி மூலங்களின் அடிப்படையில், உரிய வெட்டுப்புள்ளிகளுடன் குறிப்பிடப்பட்டுள்ளன.
விசேட தேவைத் தொகுதியின் கீழ் புலமைப்பரிசிலுக்கு உரித்தான பரீட்சார்த்திகளின் மொத்தப் புள்ளிகளுடன் அவர்கள் புலமைப்பரிசில் பெற்றுக் கொண்டமைக்கான விசேட குறிப்பொன்றும் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் விண்ணப்பங்களை அனுப்புவதற்காக, அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் வழங்கப்பட்ட User Name மற்றும் Password இனை பயன்படுத்தி, உரிய பாடசாலையின் பெறுபேறுகளை தரவிறக்கி, அச்சிட்டு பெறுவதற்கான வசதியும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்காக, onlineexams.gov.lk/eic இற்கு சென்று School Account Login என்பதில் பிரவேசிக்கவும்.
சகல மாகாண மற்றும் வலய பணிப்பாளர்களும் இம்முறை மூலம் மாகாண, வலய மட்ட பெறுபேறுகளை பெறுவதற்கான வசதியும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்காக onlineexams.gov.lk/onlineapps/இல் Exam Result Sheets என்பதை கிளிக் செய்யவும்.
அனைத்து பாடசாலைகளினதும் பெறுபேறுகள் எதிர்வரும் நாட்களில் தபாலில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெறுபேறுகள் தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு எதிர்வரும் 2023 பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரை மேன்முறையீடு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்கள தொடர்புகளுக்கு
பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்புக் கிளை
011-2784208
011-2784537
011-2786616
011-2785922
துரித இலக்கம்
1911
பெறுபேறுகளை பெற
Add new comment