முஜிபுர் ரஹ்மானின் இடத்திற்கு AHM பௌசி

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து முஜிபுர் ரஹ்மான் விலகியதை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி நியமிக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு போட்டியிடுவதன் காரணமாக தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக முஜிபுர் ரஹ்மான் நேற்று பாராளுன்றத்தில் விசேட உரை ஒன்றை நிகழ்த்தி அறிவித்தார்.

முஜிபுர் ரஹ்மானின் பதவி விலகலை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு நியமிக்கப்படவுள்ள பௌசி, முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் அரசாங்கங்களில் அமைச்சராக பதவி வகித்தார்.

கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அவர் பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பை இழந்தார்.

இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியில் வேட்பாளர் பட்டியலில் அடுத்த இடத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்றுள்ள அவர், தற்போது பாராளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பை பெற்றுள்ளார்.


Add new comment

Or log in with...