குதிரைப்பந்தய திடலில் 24 வயது பல்கலைக்கழக மாணவி கொலை

- 24 வயது பல்கலைக்கழக மாணவன் வெல்லம்பிட்டியில் கைது

கொழும்பு குதிரைப் பந்தய திடலுக்கருகில் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதியின் கொலை தொடர்பில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (17) நண்பகல் 12.00 மணிக்கும் பிற்பகல் 1.00 மணிக்கும் இடையில் கொழும்பு குதிரைப் பந்தய திடலுக்கு அருகில் பார்வையாளர் பகுதியில் யுவதி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் கொலை செய்யப்பட்ட வீழ்ந்து கிடப்பதைக் கண்டு பொலிஸாருக்கு வழங்கிய அறிவித்தலின் பிரகாரம், பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அதற்கமைய, இவ்வாறு உயிரிழந்தவர், ஹோமாகம, கிரிவத்துடுவ, புபுது உயன பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பல்கலைக்கழக மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் மூன்றாம் வருட மாணவி என தெரிய வந்துள்ளது.

குறித்த யுவதியின் கழுத்தில் வெட்டுக் காயம் காணப்பட்டுள்ளதுடன், அவர் கூரிய ஆயுதமொன்றினால் கொலை செய்யப்பட்டிருக்கலாமெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த யுவதி வீழ்ந்திருந்த இடத்தில் மடிகணனி பை மற்றும் கையடக்கத் தொலைபேசி, குடிநீர் போத்தல் என்பன காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதற்கமைய, குறித்த சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர் ஒருவரை வெல்லம்பிட்டியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் 24 வயதான பல்கலைக்கழக மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இது காதல் விவகாரமாக இருக்கலாம் எனும் கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கறுவாத்தோட்டம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Add new comment

Or log in with...