கொலை குற்றம்; கைது செய்ய சென்ற வேளையில் 2 சந்தேகநபர்கள் பரஸ்பர சூட்டில் பலி

- மற்றுமொரு கொலை திட்டத்திற்கு தயாரானதாக தகவல்

மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்வத்தை பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (18) அதிகாலை, மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்வத்த பகுதியில், கொலைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் வீடொன்றில் பதுங்கி இருப்பதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களுக்கமைய, இருவரையும் கைது செய்யச் சென்ற வேளையில் இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் குறித்த இரு சந்தேகநபர்களும் காயமடைந்து மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 34, 37 வயதுடைய போத்தல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

கடந்த ஓகஸ்ட் 24ஆம் திகதி ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி, நுபுதுமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள சலூன் ஒன்றில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் மற்றும் கடந்த ஒக்டோபர் 19ஆம் திகதி காலி, யக்கலமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நபர் ஒருவரும் 4 வயது சிறுவன் ஒருவனும் (காயமடைந்து பின்னர் மரணம்) சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ஆகியவற்றுடன் இவர்களுக்கு தொடர்பு உள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இவர்கள் மினுவாங்கொடை பிரதேசத்தில் மற்றுமொரு கொலைச் சம்பவத்திற்கு தயாராகி திட்டமிட்டு வருவதாக கிடைக்கப் பெற்ற புலனாய்வுத் தகவலுக்கமையவே குறித்த சுற்றிவளைப்பை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர்களிடம் இருந்து T56 ரக துப்பாக்கி ஒன்றும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும் கூரிய ஆயுதமொன்றையும் பொலிசார் மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Add new comment

Or log in with...