இலங்கை தொடர்ந்தும் நடுத்தர வருமான நாடாகவே இருக்கும்

- சலுகைக் கடன் வசதியைப் பெறுவதற்காக தற்காலிக முடிவு

இலங்கை தொடர்ந்தும் நடுத்தர வருமானம் பெறும் நாடாகவே இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கையின் கடன் தரமதிப்பீடு குறைக்கப்பட்டதன் காரணமாக புனரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கியிடமிருந்து (IBRD) வர்த்தகக் கடன் பெறுவதற்கு இலங்கைக்கு தொடர்ந்தும் சந்தர்ப்பம் கிடையாது என  அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, சர்வதேச அபிவிருத்திச் சங்கம் (IDA) வழங்கும் சலுகைக் கடன் வசதியைப் பெறுவதற்காக, நடுத்தர வருமானம் பெறும் நாடு என்ற நிலையை தற்காலிகமாக  பொருட்படுத்தாது  செயற்பட வாய்ப்பு வழங்குமாறு உலக வங்கியிடம் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை நேற்று (10) அங்கீகாரம் அளித்துள்ளது.

இக்கட்டான நிலையிலுள்ள நாடுகளுக்கு சலுகை அடிப்படையிலான உதவி வழங்கும் உலக வங்கியின் கீழ் இயங்கும் அமைப்பாக சர்வதேச அபிவிருத்திச் சங்கம் செயல்படுகிறது.

இதன்படி, இடைநிலை சலுகைக் கடன் திட்டத்தை (Reverse graduation) மிகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே பின்பற்ற அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த முறை "gap" என்று அழைக்கப்படுகிறது, மேலும் இந்தோனேசியா உட்பட 12 நாடுகள் ஏற்கனவே இந்த முறையைப் பயன்படுத்தி கடன் பெற்றுள்ளன.


Add new comment

Or log in with...