42,000 பேருக்கு சமுர்த்தி கிடைக்கவில்லை சபையில் சாணக்கியன் சுட்டிக்காட்டு

 

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சமுர்த்தி உதவி பெறுவதற்கு தகுதியிருந்தும் இதுவரை, அவ்வுதவிகள் கிடைக்காத பல்லாயிரக்கணக்கான மக்கள் உள்ளதாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 42,000 பேர் உள்ளனரென்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பி  சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 154 சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடம் காணப்படுவதாகவும் தெரிவித்த அவர், சமுர்த்தி உதவிபெறுவோருக்கான பட்டியல் முறையாக தயாரிக்கப்படாமைக்கு இதுவும் ஒரு காரணம் என்றும் சுட்டிக்காட்டினார்.இந்த வெற்றிடங்கள் நிரப்பப்பட்டால் சமுர்த்தி உதவி வழங்கல் தொடர்பான நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்க முடியும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் கேள்வி ஒன்றை எழுப்பிய சாணக்கியன் எம்பி, அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமுர்த்தி இராஜாங்க அமைச்சர் அனுர பெஸ்குவலிடம் கேட்டுக் கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் தாய், பிள்ளைகளென ஒரே வீட்டுக்குள்ளேயே அனைவரும் வாழ்கின்றனர். அவ்வாறான குடும்பங்களில் தாய்க்கு சமுர்த்தி உதவி வழங்கப்பட்டால், அவரது மகனது குடும்பத்திற்கு சமுர்த்தி உதவி வழங்கப்படுவதில்லை. அவ்வாறு பிள்ளைகளில் ஒருவர் வெளிநாட்டு வேலை வாய்ப்பில் இருந்தாலோ, மோட்டார் சைக்கிள் ஒன்று அல்லது முச்சக்கர வண்டி ஒன்றை வைத்திருந்தாலோ அவர்களுக்கும் சமுர்த்தி உதவி வழங்கப்படுவதில்லை.

வெளிநாட்டில் வேலைவாய்ப்பிலுள்ள ஒருவர் உழைக்கும் வருமானம் அவரது குடும்பத்தைப் பராமரிக்கவே போதாமல் இருக்கும். அவ்வாறுள்ள நிலையில் இரண்டு, மூன்று குடும்பங்கள் உள்ள ஒரு வீட்டில் முழு குடும்பத்திற்கும் அவரது வருமானம் போதுமானதாக இல்லை.

இதனைக் கருத்திற் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அமைச்சரிடம் சாணக்கியன் எம்பி,வேண்டுகோள் விடுத்தார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)


Add new comment

Or log in with...