கொன்சியூலர் சேவைகள் e-Channeling முறை மூலம் மாத்திரம்

- செப்டெம்பர் 29 முதல் ஆரம்பம்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் பிரிவின் சேவைகளை பெற e-Channeling சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

SLT மொபிடெல் உடன் இணைந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு எதிர்வரும் வியாழக்கிழமை செப்டெம்பர் 29ஆம் திகதி முதல் e-Channeling Appointment முறைமையை அறிமுகப்படுத்தவுள்ளதாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது கொன்சியூலர் அலுவல்கள் பிரிவின் சரிபார்ப்பு மற்றும் அத்தாட்சிப்படுத்தல் பிரிவில் சிறந்த மற்றும் பயனுள்ள சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு பொதுமக்களுக்கு வசதியளிப்பதாக அமையும்.

e-Channeling Appointment முறைமையானது, அமைச்சின் கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு,  யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, குருணாகல், மாத்தறையில் உள்ள அதன் பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்களில், தங்களது ஆவணங்களை அத்தாட்சிப்படுத்துவதை ஒன்லைன் மூலம் பெற்றுக் கொள்வதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தும்.

e-Channeling Appointment  சேவையைப் பெற விரும்பும் கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்கள் 225 அல்லது நிலையான அழைப்புத் தொலைபேசி பாவனையாளர்கள் 1225 ஆகிய இலக்கங்கள் ஊடாகவும் மொபிடெல் e-Channeling இணையம் www.echannelling.com ஊடாகவும் பதிவுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.mfa.gov.lk ஊடாகவும் இதனை மேற்கொள்ள முடியுமென அமைச்சு அறிவித்துள்ளது.

கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு மற்றும் அதன் பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்களின் அனைத்து அத்தாட்சிப்படுத்தல் பிரிவுகளும் 2022 செப்டம்பர் 29 முதல் e-Channeling Appointment  முறைமை மூலமாக மாத்திரமே சேவைகளைப் பெற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்கு தங்கள் சேவைகள் வழங்கப்படுமென, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


Add new comment

Or log in with...