நாவலப்பிட்டி மக்களுக்கு அமைச்சர் பந்துல உறுதி
மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையால் பல பகுதிகள் பாரிய சேதங்களை எதிர்க்கொண்டுள்ளது. அத்தோடு, தோட்டங்களில் நிர்மாணிக்கப்பட்டிருந்த பாலங்கள் வெள்ளத்தின் அள்ளுண்டு செல்லப்பட்டமையால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இவ்வாறு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்காக பெருந்தெருக்கள், போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன நாவலப்பட்டி பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் அழைப்பின் பேரில் அப்பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சர் பந்துல குணவர்தன, நாவலப்பிட்டி - இங்குரு ஓயா பாலம் இடிந்து வீழ்ந்ததன் காரணமாக இங்குரு ஓயா பகுதிக்கு செல்ல முடியாத நிலை குறித்து மக்களிடம் கேட்டறிந்தார். இவ்விஜயத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன. நாவலப்பிட்டி பிரதேசம் வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளத்தினால் பல உயிர்கள் பலியாகியுள்ளதாகவும், அங்கு வாழ்ந்த மக்களின் பல வீடுகள் வெள்ளத்தினால் அழிந்துள்ளதாகவும் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கலந்துரையாடி பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை விசேட தேவையாக கருதி தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
ஹற்றன் சுழற்சி நிருபர்
Add new comment