- பதில் ஜனாதிபதியாக முதலாவது அதி விசேட வர்த்தமானியை ரணில் வெளியீடு
இன்று (13) நண்பகல் 12.00 மணி முதல் நாளை (14) அதிகாலை 5.00 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ளார்.
இங்கு அட்டவணையில் குறிப்பாகக் குறிப்பிட்டுள்ள பிரதேசங்களில் பொது மக்கள் ஒழுங்கினைப் பேணிவருதல் கட்டாயமானதென என்னால் கருதப்படுவதனால், (40 ஆவது அத்தியாயமான) பொது மக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 16 ஆவது பிரிவின் கீழ் எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், பிரதம அமைச்சர், அரசியலமைப்புச் சட்டத்தின் 37(1) ஆம் பிரிவின் பிரகாரம் சனாதிபதி அவர்களினால் வழங்கப்பட்ட நியமனத்திற்கு அமைய, ரணில் விக்கிரமசிங்க ஆகிய நான், செயலாளர் பாதுகாப்பு அமைச்சு அல்லது செயலாளர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அல்லது பொலிஸ்மா அதிபர் அல்லது அவர்களினால் அதிகாரமளிக்கப்படுகின்ற யாதேனுமொரு அலுவலரினால் வழங்கப்படுகின்ற எழுத்துமூல அனுமதிப் பத்திரத்தின் அதிகாரத்தின் கீழன்றி, 2022 ஜூலை மாதம் 13 ஆந் திகதி 12.00 மணித்தியாலம் முதல் 2022 ஜூலை மாதம் 14 ஆந் திகதி 05.00 மணித்தியாலம் வரையில் எந்தவொரு நபரும் யாதேனுமொரு பொதுப் பாதையொன்றில், புகையிரதப் பாதையொன்றில், பொது பூங்காவொன்றில், பொது விளையாட்டு மைதானமொன்றில் அல்லது வேறு பொது இடமொன்றில் அல்லது அப்பிரதேசங்களிலுள்ள கடற்கரையில் இருத்தலாகாது என இந்த உத்தரவின் ஊடாக கட்டளை இடுகின்றேன்.
ரணில் விக்ரமசிங்க,
பிரதம அமைச்சர்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 37(1) ஆம் பிரிவின் பிரகாரம்
சனாதிபதி அவர்களினால் வழங்கப்பட்ட நியமனத்திற்கேற்ப
2022, யூலை மாதம் 13ஆந் திகதி,
கொழும்பு
Add new comment