மன்னாரில் கரடி தொல்லை

மன்னார் மாவட்டத்தில்  வட்டுப்பித்தான் மடு,நானாட்டான், வங்காலை போன்ற பகுதிகளில் அண்மைய நாட்களாக கரடி ஒன்றின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. நேற்றுமுன்தினம் பலர் கரடி கடிக்கு இலக்காகியுள்ளனர்.

அதில் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இப்பகுதியில் தொடர்ச்சியாக கரடியின் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று வருகின்ற போதும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் எரிபொருள் பிரச்சினை காரணமாக அப்பகுதிக்கு செல்லமுடியாதுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதனைதொடர்ந்து இரவு நேரங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் கரடி நுழைவதாகவும் அதிகாலை நேரங்களில் நடமாடும் மக்களை தாக்குவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னார் பொது வைத்தியசாலையில் மிருக கடிக்குரிய மருந்து தட்டுப்பாடு நிலவி வருகின்ற நிலையில் தொடர்ச்சியாக கரடி மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை இரவு மன்னார் பிரதான காலப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவரையும் கரடி தாக்கியுள்ளது. இதனையடுத்து இவர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனவே வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கான எரிபொருளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 27ஆம் திகதி அதிகாலை 3.30மணியளவில்  கரடி நானாட்டான் பிரதேச செயலக பிரதான வீதியில் நடமாடுவதையும்,  கரடியை கண்டு நாய்கள் ஓடுவதையும் காணக்கூடியதாகவிருந்தது.

இப்பகுதியில் கரடியின் நடமாட்டத்தை  CCTV கேமரா காட்சிகளில் காணக்கூடியதாகவிருந்தது.

மன்னார் குறூப்  நிருபர்

 


Add new comment

Or log in with...