இராணுவத்தினரால் 16 பண்ணைகளில் 1,063 ஏக்கரில் பசுமை விவசாயச் செய்கை

- உணவு உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் இராணுவத்தினர் முழுமையான பங்களிப்பு

இலங்கை இராணுவத்தின் தேசிய மற்றும் தற்போதைய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக பசுமை விவசாயத்தை மேம்படுத்தும் திட்டம் விளங்குகின்றது. இலங்கை இராணுவத்தின் பசுமை விவசாய செயற்பாட்டு குழுவினை இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் விக்கும் லியனகே அண்மையில் ஆரம்பித்து வைத்தார்.

இலங்கை இராணுவ விவசாயம், கால்நடை பணிப்பகம் மற்றும் இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடை படையணியினால் நாடளாவிய ரீதியில் 16 இராணுவப் பண்ணைகளில் விவசாயம் மேற்கொள்ளப்படுகின்றது. 1063 ஏக்கர் நிலப்பரப்பில் அரசுக்குச் சொந்தமான விவசாயம் மேற்கொள்ளப்படாத நிலப்பரப்பில் விவசாயம் மேற்கொள்வதற்கான நடவடிக்கையினை இலங்கை இராணுவம் ஆரம்பித்துள்ளது.

இதன்படி, இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் வழிகாட்டல் மற்றும் பூரண மேற்பார்வையின் கீழ், இலங்கையில் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இராணுவம் விவசாயத் துறை நிபுணர்கள் மற்றும் விவசாயத் துறையில் அறிவு மிக்க அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.

இதன் முதற்கட்டமாக 500 ஏக்கர் நிலப்பரப்பில் சோளப்பயிர் செய்கையை இலங்கை இராணுவம் ஆரம்பித்துள்ளது. அதன்படி தம்புத்தேகம நிரவிய இராணுவப் பண்ணையில் 100 ஏக்கர் சோளச் செய்கையை ஆரம்பிப்பதற்கு நேற்றுமுன்தினம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தேசத்தின் பாதுகாவலர்களாக, இலங்கை இராணுவம் இன்றைய இலங்கையின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் தனது முழுப் பங்களிப்பையும் வழங்கி வருவதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

கெப்டன் வா. சுதர்ஸ்சன்


Add new comment

Or log in with...