எரிபொருள் மாபியாக்கள் பெருகியுள்ளதாக அம்பாறை மாவட்ட மக்கள் வேதனை!
அத்தியாவசிய சேவைகளுக்காக தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையம் உள்ளிட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களினால் உருவாக்கப்படும் ‘எரிபொருள் மாபியா’ தொடர்பில் மக்கள் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக அலைக்கழிக்கப்படும் அரச ஊழியர்கள் மற்றும் சாதாரண பொதுமக்கள் தொடர்பில் யாரும் கவனம் செலுத்தவோ அல்லது சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ அல்லது பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பாகவோ இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.
இதேநேரம் நாட்டில் அரசாங்கம் மீது குற்றம் சுமத்தும் நாம் நமது பிரதேசத்தில் இடம்பெறும் முறைகேடுகளை தட்டிக் கேட்கின்றோமா? என ஒரு முறை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அப்படியான ஒரு அநீதியான நிலையில்தான் இன்றைய சில எரிபொருள் நிலையங்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. சில பெற்றோல் நிலைய உரிமையாளர்களும் ஊழியர்களும் இணைந்தே இன்று பெற்றோல் மாபியாவை உருவாக்கியுள்ளனர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
மக்களுக்கு வழங்க வேண்டிய பெற்றோலை பதுக்கும் இவர்கள், முகவர்கள் மூலம் 1500 வரையில் விற்பனை செய்து கொள்ளை இலாபம் ஈட்டி வருவதை பலர் அறிவதில்லை. இந்நிலை பெற்றோலுக்கு மாத்திரமன்றி அனைத்திலும் இடம்பெறுகின்றது. இதனை கேட்பதற்கோ பார்ப்பதற்கோ யாரும் இல்லாத நிலையில் அவர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
ஆனாலும் இவ்வாறானவர்கள் இன்று மக்களுக்கு பதில் சொல்லாவிட்டாலும் என்றோ ஒரு நாள் இறைவனுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். இதுவே எரிபொருளுக்காக காத்திருக்கும் மக்களின் கருத்து ஆகும்.
அது அவ்வாறிருக்க அத்தியாவசிய சேவைகளுக்காக மாவட்ட செயலகத்தால் தெரிவு செய்யப்பட்ட பெரிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கூட ஜெனரேட்டர் இல்லாத நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் பல மணிநேரம் உத்தியோகத்தர்களும் அப்பாவி மக்களும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அவ்வாறான எரிபொருள் நிலையத்தை அத்தியாவசிய சேவைக்காக சிபாரிசு செய்தவர்கள் யார்?
அது அவ்வாறிருக்க டோக்கன் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தும் போது கூட அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றது. இதற்குள் வன்முறைத்தனமும் பணமும் உள்ளவர்கள் உள்ளடக்கப்பட்டு விடுவர். இதற்கிடையே அரசியல் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களின் சொகுசு வானங்கள் எவ்வித தடையுமின்றி பெற்றோல் நிலையத்தினுள் நுழையும். அவர்களது வாகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வாகத்திற்குத் தேவையான அளவு எரிபொருள் நிரப்பப்படும்.
அது போதாதென்று வாகனத்தில் உள்ளே உள்ள கொள்கலன்களும் நிரப்பப்படும். அது போகட்டும் என பார்த்தால் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர்களே தங்களுக்கு தேவையானவர்களின் கொள்கலன்களை பெற்று எரிபொருளை நிரப்பிக் கொடுப்பர்.
இந்நிலையில் பாதுகாப்பு வழங்க வேண்டிய பாதுகாப்பு தரப்பில் இருந்தும் சில வாகனங்கள் உள்ளே நுழைந்து எரிபொருளை பெற்றுக் கொள்ளும்.
இத்தடைகளை எல்லாம் தாண்டிய பின்பே வரிசையில் நாட்கணக்காக மணிக்கணக்கான காத்து நிற்கும் அப்பாவி மக்களுக்கும் ஏன் அரச உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்படும். இந்நிலையில் இடைநடுவில் எரிபொருள் முடிவடைந்து விட்டதாக தகவல் வரும். இதுவே இன்றைய சில எரிபொருள் நிரப்பு நிலையங்களின் நிலைமை. குறிப்பாக அத்தியாவசிய சேவைகளுக்காக தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையம் எனும் போர்வையில் நாளாந்தம் எரிபொருளை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இருந்து பெற்றுக் கொள்ளும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இவ்வாறான முறைகேடுகள் தொடர்கின்றன.
ஆகவே குறித்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கமும் அதிகாரிகளும் உரிய நடவடிக்கை விரைவாக எடுக்கவில்லையாயின் அம்பாறை மாவட்ட மக்கள் பாதிக்கப்படுவர் என்பது நிதர்சனமான உண்மை.
வி. சுகிர்தகுமார்
(வாச்சிக்குடா விஷேட நிருபர்)
Add new comment