யாழ்.- பாண்டிச்சேரி படகுச் சேவை பாதுகாப்பு அமைச்சு நேற்று அனுமதி

அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

தமிழ்நாட்டின் பாண்டிச்சேரி, காரைக்கால் போன்ற துறைமுகங்களுக்கும் காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் இடையிலான சரக்கு படகுச் சேவை நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மிக விரைவில் சரக்கு படகுச் சேவை ஆரம்பிக்கப்படுமெனவும் தெரிவித்தார். இப் படகு சேவை மூலம் தேவையான மண்ணெண்ணெய், டீசல் போன்ற எரிபொருட்களையும், உரம், பால் மா, மருந்துப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையில் தேவையானளவு எடுத்துவர முடியுமென்று வலியுறுத்தி வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இப் படகு சேவையை ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க முயற்சிகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றார்.

அதேவேளை, பலாலி, - திருச்சி, சென்னைக்கிடையிலான விமான சேவையையும் திட்டமிட்டபடி ஜூலை 01 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 


Add new comment

Or log in with...