பிரகீத் எக்னலிகொட கடத்தல்; 9 இராணுவ புலனாய்வு உறுப்பினர்களுக்கும் பிணை

- பொய் சாட்சியம் வழங்கியதாக தெரிவித்த முன்னாள் LTTE உறுப்பினருக்கு வி.மறியல்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தி காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒன்பது பேரையும் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 09 சந்தேகநபர்களையும் இன்றையதினம் (13) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடந்த ஜூன் 03ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று (17) ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது நீதிமன்றம் குறித்த 9 பேருக்கும் மீண்டும் பிணை வழங்குமாறு உத்தரவு வழங்கியுள்ளது.

ஏற்கனவே வழங்கப்பட்ட பிணை நிபந்தனைகளின் அடிப்படையில் அவர்களை விடுவிக்க நீதிமன்றம் இதன்போது உத்தரவிட்டது.

இன்றையதினம் நீதிமன்றத்தில் சாட்சியமளித்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் சுமதிபால சுரேஷ் பொய் சாட்சியம் வழங்கியமை காரணமாக அவரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

மனுதாரர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி வசந்த பெரேரா, வழக்கு விசாரணையின் இறுதிநாளில் அவர் பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்திற்கு முரணான சாட்சியங்களை சாட்சியாளர் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

எனவே, முறைப்பாட்டில் சம்பந்தப்பட்ட சாட்சியை அரசு தரப்பு சாட்சியாக பெயரிட்டு குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்குமாறு அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரினார்.

அதன்படி, நீதிமன்ற அனுமதியுடன், சாட்சியிடம் அரச சிரேஷ்ட சட்டத்தரணி குறுக்கு விசாரணை நடத்தினார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போனமை தொடர்பில் 2015ஆம் ஆண்டு ஹோமாகம நீதவானிடம் தாம் வழங்கிய வாக்குமூலம் உண்மைக்குப் புறம்பானது என குறுக்கு விசாரணைகளுக்குப் பதிலளித்த சாட்சியாளாரான சுமதிபால சுரேஷ் தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் அழுத்தத்தின் காரணமாக தான் அவ்வாறான பொய்யான வாக்குமூலத்தை வெளியிட்டதாக அவர் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை தாம் ஒருபோதும் சந்தித்ததில்லை எனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரேமதிலக்க என்ற அதிகாரியினால் எழுதிக் கொடுக்கப்பட்ட பிரதிக்கு அமைய அவரை தனக்கு தெரியும் என ஹோமாகம நீதவானிடம் தெரிவித்ததாகவும் சாட்சியாளர் குறிப்பிட்டார்.

சாட்சியத்தின் குறுக்கு விசாரணை இன்று நிறைவடையாத நிலையில், விசாரணையை எதிர்வரும் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்க பெஞ்ச் தீர்மானித்திருந்தது.

அதற்கமைய, சாட்சியாளர் மீது ஏதேனும் செல்வாக்கு செலுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவின் குழு கொள்ளைப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ் விடுத்த கோரிக்கையை ஏற்று சஞ்சீவ மொராயஸ், தமித் தொட்டவத்த, மஹேன் வீரமன் ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


Add new comment

Or log in with...