இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் 50,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்குத் தேவையான நிதியை இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ், அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்திற்கு ஒதுக்குவது என பிரதமர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அரிசித் தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதற்காகவும், அரிசி விலை அசாதாரணமாக அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதற்காகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற இந்திய கடன் தொடர்பான கலந்துரையாடலில் வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெனாண்டோ, நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா, முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் அரச மற்றும் தனியார் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Add new comment