- உருவாக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பந்துல தெரிவிப்பு
- யாழ். கடுகதி ரயிலினால் 3 இலட்சம் ரூபா நட்டம் ஏற்படும் எனவும் தெரிவிப்பு
ரயில் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் கொள்கையொன்றை வகுக்கப் போவதாகவும் பஸ் கட்டணத்தில் அரைவாசியை ரயில் கட்டணமாக அதிகரிப்பதற்கு உத்தேசித்துள்ளதாகவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதே வேளை,கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான இரவு நேர கடுகதி கடுகதி ரயிலை இயக்குவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் எரிபொருளுக்காக மாத்திரம் 13 இலட்சம் ரூபா செலவாவதுடன் வருமானமாக 10 இலட்சம் ரூபாவையே பெற முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ஆளும் கட்சி எம்.பி.யான பிரேம்நாத் சி தொலவத்த எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்:
எரிபொருள் விலை கடுமையாக அதிகரித்து வருவதால் ரயில்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.இதனால் ரயில் கட்டணங்கள் தொடர்பாக கொள்கையொன்றை வகுக்க வேண்டும். பஸ் கட்டணத்தில் அரைவாசியையாவது ரயில் கட்டணமாக அறவிட வேண்டும்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை இரவு நேர கடுகதி ரயிலை இயக்குவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ள நிலையில், அதற்கான எரிபொருளுக்காக மட்டும் 13 இலட்சம் ரூபா செலவாகும். 500 ஆசனங்கள் உள்ள ரயிலில் ஒரு பயணியிடமிருந்து 2000 ரூபா வீதம் கட்டணம் அறவிடப்பட்டாலும் 10 இலட்சம் ரூபாவே வருமானமாக கிடைக்கும்.அதற்கமைய சுமார் 3 லட்சம் ரூபா நஷ்டத்தை எதிர் நோக்கநேரும்.
அதனால் தான் ரயில் கட்டணங்கள் தொடர்பாக கொள்கையொன்றை வகுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க பஸ் கட்டணத்தில் அரைவாசியையாவது ரயில் கட்டணமாக அறவிட வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்
Add new comment