'வீழ்ந்த இடத்தில் எழுவோம்' எனும் தலைப்பில் ஆரம்பம்
இன விடுதலை வேண்டி பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான மக்கள் பேரணி செவ்வாய்க்கிழமை (17) மூன்றாவது நாளாக திருகோணமலை சிவன்கோவில் முன்றலிலிருந்து 'வீழ்ந்த இடத்தில் எழுவோம் ' என்ற தலைப்பில் ஆரம்பமாகியது.
இப்பேரணியை வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
சிவன்கோவில் முன்றலில் தயாரிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி மக்களுக்கு பறிமாரி 2009இறுதி யுத்த காலப்பகுதியில் முள்ளி வாய்க்காலில் இடம்பெற்ற இனப் படுகொலை தொடர்பாக நினைவு கூரப்பட்டது.
இந் நிகழ்வில் மதகுருமார்கள், இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் தலைவர் ச.குகதாசன், முன்னாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, தாயக ஜனநாயக் கட்சி தலைவர் வி. நிமலன், சிரேஸ்ட ஊடகவியலாளர் திருமலை நவம் ஆகியோர்கள் கலந்துகொண்டு பேரணியினை ஆரம்பித்து வைத்தனர்.
செவ்வாய்க்கிழமை (17) ஆரம்பிக்கப்பட்ட மக்கள் பேரணியானது மூன்றாம் கட்டை சந்தி உடாக கன்னியா சென்றடைந்து அங்கிருந்து வவுனியா நெடுங்கேணி செட்டிக்குளம் வீதி வழியாக முல்லைத் தீவைச் சென்றடையும்.
இன்று (18) வடமாகாணத்தில் இருந்து வரும் காணாமல் ஆக்கப்பட்டோர்களின் பேரணியுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்றலில் சென்றடைந்து நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்குகொள்ளும்.
இதேவேளை திங்கட்கிழமை (16) மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இப்பேரணியானது வாழைச்சேனை, வாகரை, மூதூர் வீதி வழியாக மாலை 6மணியளவில் திருகோணமலையைச் சென்றடைந்தது.
'முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்' என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் அவல நிலை குறித்து அதனை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு, கடந்த 12ஆம் திகதி தொடக்கம் கிழக்கில் பல்வேறு இடங்களில் நினைவு கூரப்பட்டு வரும்வேளை இப் பேரணியானது பொத்துவில்லில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மதகுருமார்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். இப்பேரணியில் பொதுமக்களை இணைந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
(அன்புவழிபுரம் தினகரன் நிருபர்)
Add new comment