- தொடர்ந்தும் பதவியில் நீடிக்க சியம்பலாபிட்டிய முடிவு
பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்வதற்கு ரஞ்சித் சியம்பலாபிட்டிய சமர்ப்பித்த கடிதத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதற்கும் அவர்கள் வகித்த பதவிகளை இராஜினாமா செய்வதற்கும் தீர்மானித்திருந்தனர்.
பாராளுமன்ற ஜனநாயகம் பாதுகாப்பாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். எனவே, பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதற்கு ரஞ்சித் சியம்பலாபிட்டிய சமர்ப்பித்த கடிதத்தை நிராகரிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நேற்று, (05) கோட்டையிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடனான கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இதன்படி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றக் குழுவின் சம்மதத்துடன், பிரதி சபாநாயகராக தாம் தொடர்ந்தும் செயற்படவுள்ளதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன மற்றும் அக்கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Add new comment