இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்தமை தொடர்பில் இரண்டு இந்திய இழுவை படகுகளுடன் 16 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று (23) இரவு இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையின் கடற்பரப்பை அத்துமீறி வெளிநாட்டு மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளினால் உள்நாட்டு மீனவ சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்பையும், இலங்கை கடல் சூழலின் பல்லுயிர் சேதத்தையும் கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்து வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்பரப்பில் வெளிநாட்டு மீன்பிடி கப்பல்களின் சட்டவிரோத மற்றும் அனுமதியற்ற மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் தொடர்ச்சியாக ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன்படி, வடக்கு மற்றும் வடமத்திய கடற்படை கட்டளைகளுடன் இணைந்த 4ஆவது வேகப் படையணியின் இந்த வேக தாக்குதல் படகுகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இச்சுற்றி வளைப்பு நடவடிக்கையில், யாழ்ப்பாணம், நெடுந்தீவிற்கு வடமேற்கு பகுதியிலும், மன்னார் இரணைதீவிற்கு வடமேற்கு பகுதியிலும் சர்வதேச கடல் எல்லையை மீறி இலங்கைக்கு உரித்தான கடற்பரப்பிற்குள் அத்து மீறி நுழைந்து, தடை செய்யப்பட்ட ஆழ் மடி மீன்பிடி முறையைக் கையாண்டு மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இரண்டு இந்திய இழுவை படகுகளை கைது செய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, குறித்த படகுகளிலிருந்த 16 இந்திய மீனவர்களை சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட மீன்களுடன் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
தற்போதுள்ள சுகாதார வழிகாட்டல்களுக்கு இணங்க குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், கைப்பற்றப்பட்ட இந்திய இழுவை படகுகள் மற்றும் மீனவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Add new comment