கால்பந்து போட்டியில் நெரிசல்: எண்மர் பலி

கெமரூனில் இடம்பெற்ற ஆபிரிக்கக் கிண்ண கால்பந்து போட்டியின்போது மைதானத்திற்கு வெளியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது எட்டுப் பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

தலைநகர் யவுன்டேவின் சுற்றுப்புறத்தில் உள்ள போல் பியா அரங்கில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியின்போது கால்பந்து ரசிகர்கள் அரங்கிற்குள் நுழைய முண்டியடிக்கும் வீடியோ காட்சி வெளியாகி இருந்தது.

இதில் உயிரிழந்தவர்களில் குழந்தை ஒன்றும் இருப்பதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்போது பல சிறுவர்களும் மயக்கமுற்றதாக மற்றொரு செய்தியில் கூறப்பட்டுள்ளது.

60,000 பேருக்கு இடவசதி உள்ள அரங்கில் கொவிட் கட்டுப்பாடுகள் காரணமாக 80 வீதத்திற்கு மேல் மைதானம் நிரம்பி இருக்கவில்லை. சுமார் 50,000 பேர் மைதானத்திற்குள் நுழைய முயன்றதாக போட்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நடைபெறும்போது கெமரூன் மற்றும் கொமொரோஸ் நாடுகளுக்கு இடையிலான போட்டி இடம்பெற்றது. இதில் கெமரூன் 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.


Add new comment

Or log in with...