ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் நினைவு தினமும் அமைதி வழி போராட்டமும்

2006 ஆம்  ஆண்டு திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் 16 ஆவது ஆண்டு நினைவு தினம்  அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு ஊடக அமையம், மட்டக்களப்பு நகரின் காந்திப்பூங்காவுக்கு முன்னாலுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் ஞாபகார்த்த நினைவுத் தூபி ஆகிய இடங்களில்  இந் நினைவு தினம் இன்று (24) அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கலந்து கொண்டவர்கள் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி  வேண்டி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊடகவியலாளர்களுக்கு நடைபெறும் அநீதிகளுக்கு எதிராக கோஷமெழுப்பியதுடன் பதாதைகளை ஏந்தி அமைதிவழி போராட்டம் நடத்தினர்.

இந் நிகழ்வானது மட்டு.ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்,  கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம்,வடக்கு கிழக்கு மற்றும் தெற்கு ஊடக அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பி.அரியநேந்திரன், ஞா.சிறீநேசன்  , இயேசுசபைத் துறவி ஜோசப் மேரி ,ஊடகவியலாளர்கள், ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பிரதி நிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

 (மட்டக்களப்பு  விசேட நிருபர்-சிவம் பாக்கியநாதன், க.விஜயரெத்தினம்)


Add new comment

Or log in with...