கிளிநொச்சி பளை பிரதேச பொது வைத்தியசாலைக்கான போதிய வைத்தியர்கள் இன்மை மற்றும் பௌதீக வளப் பற்றாக்குறை காரணமாக தொடர்ந்தும் அசெளகரியங்களை எதிர் கொள்வதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்..
கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் அமைந்துள்ள பளை பிரதேச வைத்தியசாலை தொடர்ந்தும் வைத்தியர்கள் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருவதுடன் குறித்த வைத்தியசாலையில் பௌதிக வளப் பற்றாக்குறை மற்றும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட கட்டுமான வேலைகள் இடைநடுவில் நிறுத்தப்பட்ட நிலையிலும் காணப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் இங்கு சிகிச்சை பெறச் செல்லும் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக ஏ-9 வீதியில் அமைந்துள்ள இவ் வைத்தியசாலையில் வைத்தியர்கள் ஏனைய ஆளனி வளங்கள் பூர்த்தி செய்யப்படாமையினால் பல்வேறு நெருக்கடி நிலைமைகள் காணப்படுவதாகவும் பிரதேச மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏ-09 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பிரதான வைத்தியசாலைகளில் ஒன்றாகக் காணப்படுகின்ற குறித்த வைத்தியசாலை வசதி குறைபாடுகளுடன் காணப்படுவதனால் வீதிப் போக்குவரத்துக்களின் போது ஏற்படுகின்ற வீதி விபத்துகளில் காயமடைந்தவர்களை பளை வைத்தியசாலையில் இருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அல்லது யாழ்ப்பாணம் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லுகின்ற போது உயிரிழப்பு ஏற்படுகின்ற அபாயநிலை காணப்படுகின்றது.
குறித்த வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்ட கட்டிட வேலைகளும் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு தளபாடங்கள் மற்றும் மருத்துவ வசதிகளும் குறைவாகவே காணப்படுகின்றது.
குறித்த பிரதேச வைத்தியசாலையானது ஒரு வைத்தியரை மாத்திரமே கொண்டு இயங்கி வருவதாகவும் மேலதிக வைத்தியரை நியமிக்குமாறும் அவசர தேவைகளுக்கான மருத்துவ வசதிகளை பெற்று தருமாறும் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
(பரந்தன் குறூப் நிருபர்)
Add new comment