இன்று முதல் மின் வெட்டு இல்லை

இன்று முதல் மின் வெட்டு இல்லை-No Power Cut From Today-Norochcholai Power Plant Back to Normal

நுரைச்சோலை அனல்மின் நிலையம் முழுமையாக இயங்கி வருவதால் இன்று முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என, மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 04ஆம் திகதி நாட்டின் பிரதான மின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடளாவிய ரீதியில் பல மணி நேரத்திற்கு மின்சாரம் தடைப்பட்டிருந்தது.

குறிப்பாக நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலுள்ள 3 மின் உற்பத்தி கட்டமைப்புகளிலிருந்து தேசிய மின் கட்டமைப்புக்கு வழங்கும் சுமார் 900 MW மின்சக்தி விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டதனால், பி.ப.  6.00 மணி - பி.ப. 9.00 மணி வரையான காலப்பகுதியில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஒரு மணித்தியால மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெறுவதால், இன்று (10) முதல் மின் வெட்டு அமுல்படுத்தப்படாது என, மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.