றொசெல்ல மற்றும் வட்டவளை ரயில் நிலையங்களுக்கு இடையில் 103 மைல் கல் பகுதியில் நேற்று (08) முற்பகல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணமடைந்த சம்பவம் ஒரு தற்கொலைச் சம்பவமென தெரிய வந்துள்ளது.
பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உடரட்ட மெனிக்கே ரயிலில் மோதுண்டு எஸ்.பிரான்சிஸ் (70) (தந்தை), பி.கமலாவதி (65) (தாய்), பிரான்சிஸ் குமார்ராஜ் (40) (மகன்) ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த மூவரின் சடலங்களும் அதே ரயிலில் நாவலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நாவலப்பிட்டி பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் கடந்த 10 நாட்களுக்கு முன் தமது வீட்டை மூடிவிட்டு வீட்டிலிருந்து தலைமறைவாகியிருந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த குடும்பத்தைச் சேர்ந்த மகன் மசாலா தூள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர் எனவும், அவர் நான்கு முறை திருமணம் செய்து கொண்டவர் எனவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபரைத் தேடி அவரை திருமணம் முடித்த பெண்கள் என கூறி ஏற்கனவே பல பெண்கள் வீட்டுக்கு வந்துள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
குறிபத்த நபல் பல்வேறு நபர்களிடம் பணம் மற்றும் நகைகளை பெற்று ஈடு வைத்து அதனை மீட்க முடியாத நிலையில், அவருக்கு எதிராக பண மோசடி தொடர்பில் பிரதேசவாசிகள் திம்புளை - பத்தனை பொலிஸில் பல முறைப்பாடுகளையும் செய்துள்ளனர்.
அதேபோல் கடன் கொடுத்தவர்களில் பலர் உயிரிழந்த மகனை தேடி பல முறை அவர் வசித்த வீட்டுக்கு வந்துள்ளதாகவும் போகாவத்தை மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் நகையொன்றை ஈடு வைத்து அதனை மீட்டுத் தரவில்லை எனும் சம்பவம் தொடர்பில், மரணமடைந்த நபருக்கு எதிரான முறைப்பாட்டை நேற்றையதினம் (08) பொலிஸார் விசாரணை செய்யவிருந்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் கடனாளிகளிடமிருந்து தப்பிக்க உயிரிழந்த மகன், தந்தை மற்றும் தாயுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர்கள் நேற்றையதினம் (08) றொசெல்ல புகையிரத நிலையத்திற்கு வந்து அங்கிருந்த ஊழியர்களிடம் உடரட்ட மெனிகே புகையிரதம் வரும் நேரத்தை அறிந்து கொண்டு அங்கிருந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனைத் தொடர்ந்தே, றொசெல்ல மற்றும் வட்டவளை ரயில் நிலையங்களுக்கு இடையில் 103 மைல் கல் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்கொலையை தடுப்போம்!
நீங்கள் தனிமையில் இருப்பதாக உணருகின்றீர்களா அழையுங்கள்
- தேசிய மனநல உதவி இலக்கம் 1926
- இலங்கை சுமித்ரயோ 011 2696666
- CCC line 1333