நுவரெலியாவில் உள்ள பிரபல சுற்றுலா விடுதி ஒன்றின் ஐந்தாவது மாடி அறையில் இருந்து தவறி வீழ்ந்த ஊழியர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (29) அதிகாலை 3.00 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் கம்பளை பிரதேசத்தை சேர்ந்த 47 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான தரங்க பிரியந்த ஹெட்டியாராச்சி என்பவராவார்.
குறித்த நபர் மேற்படி சுற்றுலா விடுதியில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்துள்ளார்.
குறித்த ஹோட்டல் ஊழியர்கள் நேற்றையதினம் (28) இரவு விருந்துபசாரமொன்றை வைத்துள்ளனர் இதனைத் தொடர்ந்து தான் தங்கியிருந்த ஐந்தாவது மாடியிலுள்ள அறைக்கு சென்ற அவர், தனது அறையின் ஜன்னல் வழியே தவறி வீழ்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் மதுபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படுகின்றது.
மரண விசாரணைகளின் பின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரதேப் பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(ஹற்றன் சுழற்சி நிருபர் - கிரிஷாந்தன், டி. சந்ரு)