அமெரிக்க விமானப் பயணம்: புதிய கொவிட் விதிகள் அமுல்

அமெரிக்கா செல்லும் பயணிகள் தடுப்பூசி போட்டுக்கொண்டதை நிரூபிக்கும் ஆவணங்களைக் காட்ட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரே பயணிகள், நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர்.

அமெரிக்கக் குடிமக்கள் உள்ளிட்ட அனைத்துப் பயணிகளுக்கும் உரிய அந்த நடைமுறை இரண்டு வாரத்தில் நடப்புக்கு வரும்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பயணிகள், அமெரிக்காவுக்கு புறப்படுவதற்கு 24 மணிநேரத்திற்குள் வைரஸ் தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது.

இதில் அமெரிக்க சுகாதார ஒழுங்குமுறைகளால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை பெற்றிருப்பது அவசியமாகும்.

18 வயதுக்கு கீழான சிறுவர்கள் தடுப்பூசி பெறும் கட்டாயத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டபோதும் பயணத்திற்கு மூன்று நாட்களுக்குள் நோய்த் தொற்று இல்லை என்பதை உறுதி செய்யும் சோதனை முடிவை காட்ட வேண்டும்.

புதிய நடைமுறை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தின் அணுகுமுறையில் உள்ள மாற்றத்தைக் குறிக்கிறது. நிர்வாகம், தற்போது பொதுவான பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதிலிருந்து பயணிகளின் தடுப்பூசித் தகுதி அடிப்படையில் கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்தது தொடக்கம் அமெரிக்கா பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் சீனா மற்றும் இந்தியா உட்பட பல நாடுகளுக்கும் பயணத் தடைகளை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.