ஸ்ரீ லங்கன் விமான சேவை ஒக்டோபர் 07 இல் கோப் குழு முன்னிலையில்

ஸ்ரீ லங்கன் விமான சேவை ஒக்டோபர் 07 இல் கோப் குழு முன்னிலையில்-COPE Committee Summons Sri Lankan Airlines

- 06 ஆம் திகதி இ.போ.ச. வுக்கும் அழைப்பு

ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தை ஒக்டோபர் 07ஆம் திகதி அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) முன்னிலையில் அழைத்துள்ளதாக கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

அதற்கமைய, வரையறுக்கப்பட்ட ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் கடந்த ஜூலை மாதம் 07ஆம் திகதி கோப் முன்னிலையில் அழைக்கப்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில் விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சினால் கோப் குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. அது தொடர்பில் குழு உறுப்பினர்களின் விசேட கூட்டம் எதிர்வரும் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக கோப் குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் 06 ஆம் திகதி இலங்கை போக்குவரத்துச் சபையும் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளது.

உரிய சுகாதார ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக, தேவையான அதிகாரிகளை ஒன்லைன் ஊடாகவும் இணைத்துக்கொண்டு கோப் குழுக் கூட்டங்கள் இடம்பெறவுள்ளதாக கோப் குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.