சிகரெட்டுக்கான வரியை அதிகரியுங்கள்

-செல்வம் எம்.பி

அத்தியாவசிய பொருட்களை விடுத்து சிகரெட்டுக்கான வரியை அதிகரிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமர் மற்றும் நிதி அமைச்சருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு தொடர்பாக நேற்று (28) அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துளார். கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அத்தியாவசிய பொருட்களுக்கான வரியை அரசாங்கம் அதிகரிக்கும் போது, சிகரெட்டின் மீதான வரியை அதிகரிக்க ஏன் பின்வாங்குகின்றது. இவ்வாறான சூழலில் தான் அரசாங்கம் ஏழைமக்களின் அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரியை அதிகரித்து வருகின்றது.

ஒரு சிகரெட்டின் விலையை 20.00 ரூபாவினால் உயர்த்தியிருந்தால் சுமார் 100 பில்லியன் ரூபாயை இழக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.

இன்று பெரும்பாலான சிறுவர்கள் முதல் பெரியோர் வரை இதனை பயன்படுத்துவதும் இதற்கு அடிமையாகி காணப்படுவதினாலும் இது ஓர் பாரிய சமூக சீர்குலைவுக்கு வழிவகுத்துக் கொண்டிருக்கிறதென்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

எனவே இதனை தடுக்க வேண்டுமென்றால் அரசாங்கம் சிகரெட் மீதான முறையான வரி முறைமையை கடைப்பிடிக்க வேண்டும்.

அவ்வாறான வரி முறைமையினால் அரசாங்கம் தனது வருமானத்தை அதிகரிக்கச் செய்வதோடு பாவனையிலும் சடுதியான வீழ்ச்சியை ஏற்படுத்த முடியும்.

இன்றைய காலப்பகுதியில் சிகரெட் பாவனையை குறைப்பது என்பது கொவிட் -19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கும் பாரிய உதவியாக அமையுமென்பதும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.