மலிங்க ஓய்வுபெற்ற தினத்திலேயே அவரின் நீண்ட கால உலக சாதனையை தகர்த்த டேவிட் வீஸ்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர வீரரான லசித் மலிங்க அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்றுமுன்தினம் மாலை அறிவித்திருந்தார்.

மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் அசகாய சூரராக ஆற்றலை வெளிப்படுத்தும் மலிங்க, நீண்ட காலமாக உலக சாதனைகள் பலவற்றை தன்வசப்படுத்தி இருக்கிறார்.

இதில் மிக முக்கியமானது ஒட்டுமொத்தமான டுவென்டி டுவென்டி போட்டிகளிலும் ஐந்து தடவைகள் ஐந்துக்கும் அதிகமான விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராக சாதனை படைத்தமையாகும்.

குறித்த சாதனையை கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் பங்கேற்று வரும் தென்னாபிரிக்காவிற்கு விளையாடி இப்போது நமீபிய தேசிய அணியிலும் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்ற 36 வயதான சகலதுறை வீரர் டேவிட் வீஸ் தகர்த்திருக்கிறார்.

ரின்பேக் ரைடர்ஸ் அணிக்கு எதிரான கரீபியன் பிரீமியர் லீக் அரையிறுதிப் போட்டியில் வீஸ் 6 விக்கெட்டுகளை அள்ளினார்,இதன் மூலமாக லசித் மாலிங்கவிடமிருந்து உலக சாதனையை முறியடித்து ஒட்டுமொத்தமான ட்வென்டி ட்வென்டி போட்டிகளில் அதிக தடவைகள் ஐந்துக்கும் அதிகமான விக்கெட்டுகளை கைப்பற்றிய சாதனையை நிலைநாட்டிய வீரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். 225 இன்னிங்ஸ்களில் வீஸ் 6 தடவைகள் 5 விக்கெட்டுக்களை பெற்றுள்ளார், 289 இன்னிங்ஸ்களில் 5 தடவைகள் 5 விக்கெட் பெறுதிகள் பெற்று மலிங்காவின் உலக சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

டேவிட் வீஸின் அபார பந்துவீச்சின் துணையோடு கரிபியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் முக்கியமான அரையிறுதியில் நடப்பு சம்பியனான டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணியை 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய செயின் லூசியா கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.