உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகநபர்களுக்கு எதிரான விசாரணைக்கு மூவரடங்கிய விசேட நீதிமன்றம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகநபர்களுக்கு எதிரான விசாரணைக்கு மூவரடங்கிய விசேட நீதிமன்றம்-Three Bench Trial-at-Bar Appointed to Hear Easter Sunday Attack Case

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான வழக்கை விசாரணை செய்ய மூன்று நீதிபதிகள் கொண்ட விசேட மேல் நீதிமன்றமொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவினால் இந்நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த தலைமையில், மேல் நீதிமன்ற நீதிபதிகளான அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகியோரைக் கொண்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிநு தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள, அச்சம்பவம் தொடர்பிலான பிரதான சந்தேகநபர்களென பெயரிடப்பட்டுள்ள 25 நபர்களுக்கு எதிரான விசாரணைக்கு, விசேட நீதிபதிகள் குழாமொன்றை நியமிக்குமாறு சட்ட மாஅதிபர் விடுத்த கோரிக்கையை கவனத்தில் கொண்டு இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த 25 சந்தேகநபர்களுக்கு எதிராக, கடந்த ஓகஸ்ட் 11ஆம் திகதி, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்ட மாஅதிபர் ஆரம்பகட்ட குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்திருந்ததோடு, குற்றச்சாட்டுகளை விசாரிக்க மூவரடங்கிய நீதிபதிகள் குழுவை நியமிக்குமாறு பிரதம நீதியரசரிடம் கோரிக்கை முன்வைத்திருந்தார்.

குறித்த குற்றப்பத்திரிகைகளில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர்கள் மீது, சதி செய்தமை, அதனை திட்டமிட்டமை, உதவி செய்தமை, வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கிகள் சேகரித்தமை, கொலை மற்றும் கொலை முயற்சி செய்தமை உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...