10 நாள் முடக்கம்; சிரேஷ்ட பிரஜைகள் உள்ளிட்ட அனைவருக்கும் இறுக்கமான வழிகாட்டல்கள்

10 நாள் முடக்கம்; சிரேஷ்ட பிரஜைகள் உள்ளிட்ட அனைவருக்கும் இறுக்கமான வழிகாட்டல்கள்-10 Day Lockdown-Strict Health Guidelines

- 65 வயதுக்கு மேற்பட்டோர் மருத்துவ காரணங்களுக்காகவே வெளியேறலாம்
- மருந்துப் பொருட்கள் வீட்டிற்கே விநியோகம்
- சாதாரண மரணங்கள் நெருங்கிய உறவினர்களுடன் அடக்க அனுமதி

நாடளாவிய ரீதியில் நேற்று (20) இரவு 10.00 மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவுக்கமைய, மக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து சுகாதார அமைச்சு பல்வேறு வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடல்நலம் தொடர்பான காரணங்களைத் தவிர வேறு எக்காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கொவிட்-19 தொற்று அல்லாத மரணங்கள் ஏற்பட்டால், குடும்பத்தில் நெருங்கிய உறவினர்கள் மாத்திரம் பங்கேற்று இறுதிச் சடங்கை 24 மணி நேரத்திற்குள் முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இக்காலகட்டத்தில் சுகாதாரம், பாதுகாப்பு, விவசாயம், அத்தியாவசிய பொருட்கள் விநியோக சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்தோடு, பல சரக்குகள் மற்றும் பேக்கரி பொருட்கள் விநியோகிப்பவர்கள், நடமாடும் சேவைகளை மேற்கொள்ள முடியும்.

அத்தியாவசிய சேவைகள் மற்றும் விநியோக சேவைகளுக்கு மாத்திரம் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள அனுமதிப்பத்திரம் பெற்ற அனைத்து வங்கிகளின் தெரிவு செய்யப்பட்ட கிளைகளை பொதுமக்களுக்காக திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில் சுகாதாரப் பணியாளர்கள் தங்கள் பணிகளுக்குச் செல்ல எவ்வித தடையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முதலீட்டு வர்த்தக சபைக்கு (BOI) சொந்தமான ஆடைத் தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதி துறையில் உள்ளவர்கள் தங்கள் பணிகளுக்கு செல்ல தடையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம், நீர், தொலைத்தொடர்பு, எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ளிட்ட பயன்பாட்டு சேவைகளை மேற்கொள்வதற்கும் எவ்வித தடங்கலும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி உள்ளிட்ட விவசாயம் மற்றும் அது தொடர்பான உற்பத்தி நடவடிக்கைகளை, மாவட்ட எல்லைக்குட்பட்ட வகையில், சமூக இடைவெளியைப் பேணி மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மதத் தலங்கள், சமூக ஒன்றுகூடல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள், ஹோட்டல்கள், வாராந்த சந்தைகள், பிரத்தியேக வகுப்புகள் போன்றவை ஊரடங்கு உத்தரவின் போது தடைசெய்யப்பட்டுள்ளன.

கட்டுமானத் தளங்களில் தினக் கூலி பெறும் தொழிலாளர்கள் குறிப்பிட்ட வேலையைச் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருந்துகள் வீட்டிற்கே விநியோகம்
இக்காலப் பகுதியில் தாங்கள் பயன்படுத்தும் மருந்துகளை வீட்டிற்கே கொண்டு வந்து தர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் (SPC) மற்றும் தபால் திணைக்களம் இணைந்து இச்சேவையை மேற்கொள்கின்றன.

அதற்கமைய, அந்தந்த பிரதேசங்களிலுள்ள அரச ஒசுசலவின் இலக்கத்திற்கு தங்களது மருந்துச் சிட்டையின் புகைப்படத்தை வட்ஸ்அப் மூலம் அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...