சீனாவில் பயங்கர வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு அணை உடைப்பெடுக்கும் அச்சம்

மத்திய சீனாவில் பெய்து வரும் கனமழையால் அங்கு பயங்கர வெள்ளம் ஏற்பட்டிருப்பதோடு வீதிகள் நீரில் மூழ்கி ஆயிரக்கணக்காக மக்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஹெனான் மாகாணத்தில் பெய்த வரலாறு காணாத மழையை அடுத்து 10,000க்கும் அதிகமான மக்கள் தற்காலிக முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

வெள்ளம் ஏற்பட்டது தொடக்கம் சங்சு நகரில் குறைந்தது 12 பேர் உயிரிழந்திருப்பதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

பிரதான வீதிகள் மூடப்பட்டு விமானப் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டிருப்பதோடு பல டஜன் நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மஞ்சள் ஆறு மற்றும் ஹைஹே நதியின் துணை நதிகளின் நீர் மட்டம் அபாய அளவை தாண்டி ஓடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 94 மில்லியன் மக்கள் வசிக்கும் ஹெனான் மாகாணத்தில் வழக்கமான மழைவீழ்ச்சி பருவத்தைத் தொடர்ந்து உச்ச அளவு காலநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வெள்ளத்திற்கு பல காரணிகள் தாக்கம் செலுத்தியபோதும் காலநிலை மாற்றம் கடுமையான காரணமாக இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

கோடையில் சீனா வழக்கமான வெள்ளத்தை அனுபவிக்கிறது, ஆனால் நகரங்களின் வளர்ச்சியும் விவசாய நிலங்களை துணைப்பிரிவுகளாக மாற்றுவதும் இத்தகைய நிகழ்வுகளின் தாக்கத்தை எழுப்பியுள்ளது.

மறுபுறம், இந்த மழை எதிர்பார்க்காத ஒன்று. பருவப்படி மழை பெய்வது இயல்புதான். ஆனால் இவ்வளவு மழை இதற்கு முன் பெய்தது இல்லை. இது எதிர்பார்க்காத வானிலை மாற்றம். வெப்பநிலை உயர்வு காரணமாக இதுபோன்ற அதீத மழை ஏற்படலாம். காலநிலை மாற்றம்தான் இதற்கான காரணமாக இருக்க முடியும் என்று சீனாவின் வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வீதிகள் நீரில் மூழ்கடிக்கப்பட்டு வேகமாக ஓடும் நீரில் கார்கள் மற்றும் குப்பைகள் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.

அண்மைய வெள்ளத்தில் சேதத்திற்கு உள்ளான ஹெனான் மாகாண அணை உடைப்பெடுக்க வாய்ப்பு இருப்பதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. லூயங் நகரில் உள்ள அணையில் 20 மீற்றர் வெடிப்பு எற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதிக்கு படையினர் அனுப்பப்பட்டிருக்கும் நிலை அந்த அணை எந்த நேரமும் உடைப்பு எடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஹென்சூ நகரில் உள்ள சுரங்க ரயில் பாதையில் பயணிகளின் இடுப்பு வரைக்கு நீர் நிரம்பி இருப்பது வீடியோ காட்சி ஒன்று காட்டுகிறது.

மீட்பாளர்கள் கையிறுகை பயன்படுத்தி மக்களை வெளியே இழுப்பதும் மற்றையவர்கள் நீர் மட்டத்திற்கு மேல் ரயில் வண்டியில் இருக்கைகளில் இருப்பதையும் அந்த வீடியோ காட்டுகிறது.

இந்த வெள்ளத்தில் எத்தனை பேர் சிக்கியுள்ளனரென தெரியவில்லை என்றபோதும் இதுவரை நூற்றுக்கணக்கானோர் மீட்கப்பட்டுள்ளனர்.

எனினும் சியாப்பி என்று பெயர் கொண்ட ஒருவர் வைபோ சமூக ஊடகத்தின் வழியாக உதவி கோரியுள்ளார். ‘வண்டியில் நீர் எனது நெஞ்சு வரைக்கும் வந்து விட்டது. என்னால் தொடர்ந்து பேசமுடியவில்லை’ என்று தெரிவித்துள்ளார். அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டாத தீயணைப்பு படையினர் பின்னர் உறுதி செய்தனர்.


Add new comment

Or log in with...